பெரும்பான்மை இருப்பதற்காக அச்சுறுத்தும் அரசியல் செய்வதா? பாஜகவில் தொடரும் நேதாஜி பேரனின் கலகக் குரல்
கொல்கத்தா: பெரும்பான்மை பலம் இருப்பதற்காக அச்சுறுத்தும் அரசியலை மேற்கொள்ளக் கூடாது என பாஜகவுக்கு அக்கட்சியின் மேற்கு வங்க துணை தலைவரும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பேரனுமாகிய சந்திரகுமார் போஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்தத்தை சந்திரகுமார் போஸ் தொடர்ந்து எதிர்த்து வருகிறார். இது பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல், சி.ஏ.ஏ. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. ஆகையால் மாநில அரசுகள் அமல்படுத்த முடியாது என கூற முடியாது என கூறி புதிய சர்ச்சையை கிளப்பியிருக்கிறார்.
சட்ட ரீதியானது மட்டுமே
இந்நிலையில் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பாஜகவின் மேற்கு வங்க துணைத் தலைவர் சந்திரகுமார் போஸ் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டால் அது மாநில அரசுகளை கட்டுப்படுத்தும். இது சட்ட ரீதியான ஒரு நடைமுறை அவ்வளவுதான்.
மக்கள் நம்பிக்கை அவசியம்
ஆனால் ஜனநாயக ரீதியாக எந்த ஒரு சட்டமுமே இந்த நாட்டு மக்களின் நம்பிக்கைப் பெற வேண்டியது அவசியம். சி.ஏ.ஏ. சரியானது எனில் மக்களிடம் சென்று விளக்கம் தர வேண்டும்.
அவதூறு பேச கூடாது
சி.ஏ.ஏ.வின் இந்த அம்சங்கள் சரியானவை; நீங்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் கருத்துகள் தவறானவை என்பதை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். இதை செய்யாமல் அவதூறாக பேச கூடாது.
அச்சுறுத்தல் அரசியல்
பெரும்பான்மை இருப்பதற்காக அச்சுறுத்தும் அரசியலை கையாளக் கூடாது. சி.ஏ.ஏவின் நல்ல அம்சங்களை மக்களிடம் முதலில் விளக்க வேண்டும்.
மதத்தை குறிப்பிட வேண்டாம்
துன்புறுத்தப்படும் சிறுபான்மையினர் என பொதுவாக சி.ஏ.ஏ.வில் குறிப்பிட்டிருக்க வேண்டும். மதங்களை சி.ஏ.ஏ.வில் குறிப்பிட்டிருக்க தேவையில்லை. நமது அணுகுமுறை நிச்சயம் வித்தியாசமானதாக இருக்க வேண்டும். இவ்வாறு சந்திரகுமார் போஸ் கூறியுள்ளார்.