நர்ஸ் அருணா இல்லாமல் வெறிச்சோடிக் கிடக்கும் அறை எண் 4
மும்பை: அருணா நன்றாக இருந்திருந்தால் என்ன செய்திருப்பாரோ நாங்கள் அதை தான் அவருக்கு செய்தோம் என்று மும்பை கே.இ.எம். மருத்துவமனை நர்ஸுகள் தெரிவித்துள்ளனர்.
மும்பையில் உள்ள கே.இ.எம். மருத்துவமனையில் நர்ஸாக இருந்த அருணா ஷன்பக் கடந்த 1973ம் ஆண்டு வார்டு பாயால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தாக்கப்பட்டதில் கோமாவுக்கு சென்றார். 42 ஆண்டுகளாக கே.இ.எம். மருத்துவமனையில் கோமாவில் இருந்த அவர் நேற்று மரணம் அடைந்தார்.
இந்நிலையில் அந்த மருத்துவமனையில் பணிபுரியும் நர்ஸுகள் அருணா பற்றி மனம் திறந்துள்ளனர்.
முட்டைக்கறி
1976ம் ஆண்டு கே.இ.எம். மருத்துவமனைக்கு நர்ஸிங் மாணவியாக வந்த சுரிந்தர் கௌர் அருணா பற்றி அறிந்ததும் அவரை சென்று பார்த்துள்ளார். கௌர் கூறுகையில், நான் அருணாவுடன் பேசவில்லை. ஆனால் அவருக்கு முட்டைக்கறி என்றால் மிகவும் பிடிக்கும். அவருக்கு அதை கொடுத்தபோது அவரது முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியை பார்க்க வேண்டுமே. சுத்தமான பெட்ஷீட் என்றால் அவருக்கு பிடிக்கும் என்றார்.
அறை எண் 4
அருணா கே.இ.எம். மருத்துவமனையில் உள்ள வார்டு நம்பர் 4ல் இத்தனை ஆண்டுகளாக இருந்துள்ளார். முன்னதாக அவரது அறைக் கதவு திறந்து வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் பற்றிய செய்தி ஊடகங்களில் வெளியானதால் பின்னர் அவரது அறைக் கதவு நிரந்தரமாக மூடி வைக்கப்பட்டது.
பக்திப் பாடல்கள்
அருணாவின் அறையில் இருந்த ஒரு சிறிய ரேடியோவில் எப்பொழுதும் பக்திப் பாடல்கள் ஓடிக் கொண்டிருக்கும். அந்த பாடல்கள் தான் அவருக்கு நம்பிக்கை அளித்ததாக பலர் நம்புகிறார்கள். அந்த ரேடியோவை யார் அந்த அறையில் வைத்தார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை.
6 மாத குழந்தை
கே.இ.எம். மருத்துவமனையில் பணிபுரியும் நர்ஸுகள் அருணாவை ஒரு 6 மாத குழந்தை போன்று பார்த்து கவனித்து வந்தனர். அவருக்கு தாங்கள் எதையும் ஸ்பெஷலாக செய்யவில்லை என்றும், அவர் நன்றாக இருந்திருந்தால் பிறருக்கு என்ன செய்திருப்பாரோ அதை தான் நாங்கள் அவருக்கு செய்தோம் என்கிறார்கள் நர்ஸுகள்.
நர்ஸுகள்
அருணா பல்லாண்டு வாழ வேண்டும் என நினைத்தோம் என்கிறார்கள் நர்ஸுகள். அருணா ஒரு டாக்டரை திருமணம் செய்யவிருந்த வேளையில் தான் அவரது வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது. அதே மருத்துவமனையில் பணிபுரிந்த ஜூனியர் டாக்டருக்கும், அருணாவுக்கும் திருமணம் நிச்சயமாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது..