சரணடைய விரும்பினார் தாவூத், ஆனால் கண்டிஷன் போட்டார்... ஏற்க மறுத்து நிராகரித்தார் சரத் பவார்
மும்பை: நிபந்தனைகள் விதித்ததால் தான் தாவூத் இப்ராகின் சரணடையும் விருப்பத்தை நிராகரித்ததாக மராட்டிய முன்னாள் முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத்பவார் தெரிவித்துள்ளார்.
மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் சுமார் 250 பேர் கொல்லப்பட்டனர். 700-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவர் தான் தாவூத் இப்ராகிம்.
இந்தியாவில் இருந்து தப்பிச் சென்ற தாவூத், தற்போது பாகிஸ்தானில் தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது. அவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு பாகிஸ்தானை மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
ராம்ஜெத்மலானி...
இந்நிலையில், மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப் பின்னர் மராட்டிய அரசிடம் தாவூத் சரணடைய விருப்பம் தெரிவித்ததாகவும், ஆனால் அதை அப்போது அம்மாநிலத்தில் முதல்வராக இருந்த சரத்பவார் நிராகரித்து விட்டதாகவும் பிரபல வக்கீல் ராம் ஜெத்மலானி கூறிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
லண்டனில் தாவூத்...
இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘மும்பை குண்டு வெடிப்புக்குப்பின் தாவூத் இப்ராகிமை நான் லண்டனில் சந்தித்தேன். அப்போது அவர், தான் இந்தியாவுக்கு திரும்பி வந்து விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கூறினார். ஆனால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ? என அவர் அஞ்சினார்.
வீட்டுக்காவல்...
எனவே தன்னை தவறாக நடத்தாமலும், சித்ரவதை செய்யாமலும் இருந்தால் இந்தியா வர தயாராக இருப்பதாக கூறினார். மேலும் சரணடையும் போது தன்னை சிறையில் அடைக்காமல், வீட்டுக்காவலில் வைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
சரண்...
இது தொடர்பாக மராட்டிய அரசு எனக்கு உறுதி அளித்தால் நான் சரணடைய தயாராக இருக்கிறேன் என்று கூறிய அவர், இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் தன்மீது தவறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டால் தண்டனையை அனுபவிக்க தயாராக இருப்பதாகவும் கூறினார்.
கடிதம்...
உடனே நான் இது குறித்து அப்போதைய மராட்டிய முதல்வர் சரத்பவாருக்கு கடிதம் எழுதினேன். மேலும் இது குறித்து உள்ளூர் அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறு எனது மகனிடமும் கூறினேன்.
கோரிக்கை நிராகரிப்பு...
ஆனால் இந்த கோரிக்கையை சரத்பவார் நிராகரித்து விட்டார். இதனால் 90-களில் மிக முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட தாவூத் இப்ராகிமை, குறைந்தபட்சம் வீட்டுக்காவலில் கூட அடைக்க முடியாமல் போயிற்று' எனத் தெரிவித்துள்ளார்.
சரத்பவார் பதில்...
இது குறித்து மராட்டிய முன்னாள் முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத்பவாரிடம் நேற்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘தாவூத் இப்ராகிம் சரணடைய விரும்புவதாக ராம் ஜெத்மலானி என்னிடம் தெரிவித்தது உண்மை தான். ஆனால் அதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. அதாவது, தாவூத் இப்ராகிம் இந்தியா வரும்போது அவரை கைது செய்யக்கூடாது என்றும், அவர் வீட்டிலேயே தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.
சட்டப்படி...
ஆனால், பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கும் ஒருவரை கைது செய்யாமல் இருக்க முடியாது என நான் தெரிவித்தேன். மேலும் இந்த சட்டத்தை ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொண்டேன்.
விருப்பம் நிராகரிப்பு...
ஆனால் இந்த ஆலோசனையை ஜெத்மலானிஜி ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் தான் தாவூத் இப்ராகிமின் சரணடையும் விருப்பம் நிராகரிக்கப்பட்டது' என பதிலளித்துள்ளார்.
பாஜக கண்டனம்...
இதற்கிடையே, இந்த சம்பவத்திற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான எம்.ஜே.அக்பர் கூறுகையில், ‘இது மிகவும் முக்கியமான விஷயம். 15 அல்லது 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வை ராம் ஜெத்மலானி கூறியிருப்பதாக நான் நினைக்கிறேன். மும்பை தாக்குதல் விவகாரத்தில் தாவூத் இப்ராகிம் இந்த வாய்ப்பை வழங்கியிருந்தால், அதை ஏன் ஏற்கவில்லை என்பது முக்கியமான கேள்விதான். ஆனால் இந்த கேள்விக்கு சரத்பவார் மற்றும் ராம் ஜெத்மலானி ஆகியோரால் மட்டுமே பதிலளிக்க முடியும்' எனத் தெரிவித்துள்ளார்.