அரசு மீது நம்பிக்கை இழந்துவிட்டோம்.. கத்தோலிக்க கிறிஸ்தவ அமைப்பின் தலைவர் பரபரப்பு பேட்டி
டெல்லி: மதரீதியான பிளவுகளை கட்டுப்படுத்தாத இந்த அரசு மீது, தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று இந்திய கத்தோலிக்க பிஷப் கூட்டமைப்பு தலைவர் கார்டினல் பேஸ்லியோஸ்ஸ க்லீமிஸ் தெரிவித்துள்ளார். இந்த அமைப்புதான் இந்திய கத்தோலிக்க திருச்சபைகளின் தலைமை பீடமாகும்.
'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில் இந்த தகவலை கூறியுள்ளார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நடைபெறும் கரோல் உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் வலதுசாரி இந்து அமைப்பினர் தொல்லை தருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இவர் பேட்டி முக்கியத்துவம் பெறுகிறது.
அரசு நிலைப்பாடு
இதுகுறித்த விவரத்தை பாருங்கள்: பாதிரியார்கள் மீதும் பிரச்சாரகர்கள் மீதும் தாக்குதல் நடக்கிறது. ஒரு பெரிய நாட்டில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவதை தடுக்க முடியாது என்பதை உணர்ந்துள்ளோம். ஆனால், அரசின் நிலைப்பாடு என்ன? சட்ட பாதுகாப்பும், தொடர் நடவடிக்கையும்தான் நாங்கள் எதிர்பார்ப்பது.
மத நம்பிக்கை
இந்த நாடு மத நம்பிக்கைகள் அடிப்படையில் பிரிந்து கிடக்கிறது. ஒரு ஜனநாயக நாட்டுக்கு இது நல்லது கிடையாது. மதசார்பு இல்லாமல் இந்த நாடு இணைந்து இருக்க வேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன். இதற்கு எதிராக நாம் இணைந்து போராட வேண்டும்.
மதமாற்ற புகார்
மத்திய பிரதேசத்தில், கரோல் பாடி வீடு வீடுக்கு சென்ற கிறிஸ்தவ பாதிரியார்கள் சுமார் 30 பேர் மீது பஜ்ரங்தள் அமைப்பினர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கட்டாய மதமாற்ற தடுப்பு சட்டத்தின்கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோல வழக்கு பதிவு செய்ய கூடாது என்பது எங்கள் கோரிக்கை.
அரசு மீது நம்பிக்கையில்லை
இதுபோன்ற அப்பாவிகளுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்படுவதும், குற்றவாளிகள் தப்புவதும் சரியல்ல. அரசு மீது நாங்கள் நம்பிக்கையை இழந்துவிட்டோம். இவ்வாறு அவர் தனது பேட்டியில் கூறியுள்ளார். தேர்தல் நேரத்தில் மட்டுமே கிறிஸ்தவர்கள் குறி வைக்கப்படுவதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என்றும் அவர் ம.பி. ராஜஸ்தான் சம்பவங்களை உதாரணம் காட்டி கூறியுள்ளார்.