டியர் மத்திய அரசே.. இந்த வீடியோவை பார்த்த பிறகும் ராணுவ வீரர்கள் பெயரை சொல்லி தேசபக்தி பேச முடியுமா?
ஸ்ரீநகர்: "எல்லையில் ராணுவ வீரர்கள் கால்கடுக்க கஷ்டப்பட்டு பணியாற்றுகிறார்கள்.. உங்களுக்கு இரண்டு மணி நேரம் ஏடிஎம் வாசலில் நிற்க முடியாதா..?" என்ற ஒரு கேள்வியை கேட்டே எதிர்த்து கோஷமிட்டவர்கள் வாயை அடைத்தனர் பாஜக தொண்டர்கள். ஆனால் நிர்வாக சீர்கேட்டால், அந்த ராணுவ வீரர்களே ஒரு நேரத்து சாப்பாட்டுக்கு வழியில்லாமல் பட்டினியாக கிடைப்பது தற்போது அம்பலமாகியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர்-பாகிஸ்தான் எல்லையில், பணியாற்றும் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் தனது குமுறலை வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதால் இந்த அவலம் அம்பலத்திற்கு வந்துள்ளது.
கான்ஸ்டபிள் அந்தஸ்தில் உள்ள தேஜ் பகதூர் யாதவ் என்பவர்தான் இந்த வீடியோவை வெளியிட்ட வீரர். இவர் எல்லை பாதுகாப்பு படையின் 29வது பட்டாலியனில் பணியாற்றி வருகிறார்.
குமுறும் வீரர்
கடுமையான உறை பனி நிலவும் காஷ்மீரில் ஒரு வாய் சாப்பாட்டைக் கூட நிம்மதியாக சாப்பிட முடியாமல் பணியாற்றி வருவதாக இவர் கூறும் உருக்கமான வார்த்தைகள் உள்ளத்தை சுடுபவையாக உள்ளன. இவரது குமுறலை கேட்பவரர்கள் இனியும் ராணுவ வீரர்கள் பெயரை உச்சரித்து, எல்லாவற்றுக்கும் ஆதாயம் தேடமாட்டார்கள் என்று நம்பலாம்.
அதிகாரிகள் ஊழல்
இதோ, தேஜ் பகதூர் கூறியவை அவரது வார்த்தைகளில் இருந்து..: அரசு என்னவோ எங்களுக்கு தேவையான உணவு பொருட்களை வாங்கி அனுப்புகிறது. ஆனாலல் எங்கள் உயர் அதிகாரிகள் அதை சட்ட விரோதமாக விற்று தங்கள் சட்டைப் பையில் போட்டுக்கொள்கிறார்கள். ஒரு சில பொருட்களை கொண்டே சமையல் செய்ய அதிகாரிகள் உத்தரவிடுகிறார்கள்.
ஊறுகாய் கூட கிடையாது
காலையில் எங்களுக்கு கிடைப்பது பரோட்டாவும், டீயும்தான். பரோட்டாவுக்கு தொட்டுக்கொள்ள காய்கறி கூட்டோ அல்லது குறைந்தபட்சம் ஒரு ஊறுகாய் துண்டு கூட கிடையாது. பரோட்டாவை அப்படியே பிய்த்து சாப்பிட்டு டீ குடித்துவிட்டு கிளம்ப வேண்டும்.
பட்டினி
ஏறத்தாழ 11 மணி நேரம் நின்றபடியே பணியாற்றுகிறோம். ஆனால் மதியம் எங்களுக்கு தரப்படும் சாம்பாரில் எந்த ஒரு காய்கறியும் இருக்காது. மஞ்சள், உப்பு இந்த இரண்டும்தான் சாம்பாரில் சேர்க்கப்பட்டிருக்கும். பருப்பை தேடி பார்க்க வேண்டிய நிலைதான். இதனுடன் தரப்படுவது ரொட்டிகள்தான். இப்படிப்பட்ட சாப்பாட்டை உட்கொண்டு வீரர்கள் எப்படி பணியாற்ற முடியும்? எனவே பல நேரங்களில் பட்டினியோடுதான் பணியாற்றுகிறோம்.
விசாரணை
எங்கள் குறைகளை சொல்லியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த வீடியோவை பார்த்துவிட்டு பிரதமர் இதில் தலையிட வேண்டும்.." என்று உருக்கமாக கோரிக்கைவிடுத்துள்ளார் அந்த பாதுகாப்பு வீரர். இதுகுறித்து எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறுகையில், தகவல் அறிந்ததும், விசாரணை நடத்த உயர் அதிகாரிகள் விரைந்துள்ளனர். குறைகள் சரி செய்யப்படும் என்றனர்.
பாதுகாப்பு அமைச்சக தோல்வி
இதில் இரண்டு விஷயம் கவனிக்க வேண்டியதாக உள்ளது. கடைசி நிலை ஊழியருக்கும் சாப்பாடு ஒழுங்காக போய் சேருகிறதா என்பதை கண்காணிப்பதில் பாதுகாப்பு அமைச்சகம் தோல்வியடைந்துள்ளது என்பது ஒன்று என்றால், ராணுவ குளறுபடியை வீடியோவில் பதிவேற்றம் செய்யும் அளவுக்கு கட்டுப்பாட்டை இழக்கவிட்டது இரண்டாவது பெரும் தோல்வி. எதற்கெடுத்தாலும் ராணுவ கட்டுப்பாடு என உதாரணம் கூறப்படும் நாட்டில், ராணுவ வீரரே உயரதிகாரிகளுக்கு எதிராக வீடியோவில் தகவல்களை பரிமாற்றம் செய்ததும் பாதுகாப்பு அமைச்சக ஓட்டையை பெரிதாக காட்டுகிறது.