109 எம்எல்ஏக்கள் சப்போர்ட்.. ராஜஸ்தானில் ஆட்சி கவிழாது.. அதிகாலை 2.30 மணிக்கு காங். அளித்த பேட்டி!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிக்குள் எந்த மோதலும் இல்லை, ஆட்சிக்கு பிரச்சனை இல்லை என்று அதிகாலை 2.30 மணிக்கு காங்கிரஸ் கட்சி பேட்டி அளித்து உள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பாக மூத்த தலைவர்கள் ரன்தீப் சுரஜ்வாலா, அஜய் மக்கான், அவினாஷ் பாண்டே ஆகியோர் பேட்டி அளித்தனர்.
மத்திய பிரதேசத்தில் கமல் நாத் ஆட்சியை தொடர்ந்து ராஜஸ்தானிலும் காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலைக்கு சென்று உள்ளது. அங்கு முதல்வர் அசோக் கெஹ்லட் மற்றும் துணை முதல்வர் சச்சின் பைலட் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சச்சின் பைலட் தனது 30 எம்எல்ஏக்கள் ஆதரவாளர்களுடன் டெல்லிக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
சச்சின் பைலட் போன் செய்தால் எடுக்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். அதே சமயம் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று சச்சின் பைலட் இன்னொரு பக்கம் புகார் வைக்கிறார்.
30 எம்எல்ஏக்கள் என் பக்கம்.. காங். மீட்டிங்கில் கலந்து கொள்ள மாட்டேன்.. மௌனம் கலைத்த சச்சின் பைலட்!
அதிகாலை பேட்டி
ராஜஸ்தானில் இப்படி நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பு நிலவி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி இது தொடர்பாக மௌனம் கலைத்து இருக்கிறது. அதிகாலை 2.30 மணிக்கு காங்கிரஸ் கட்சி பேட்டி அளித்து உள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பாக மூத்த தலைவர்கள் ரன்தீப் சுரஜ்வாலா, அஜய் மக்கான், அவினாஷ் பாண்டே ஆகியோர் இது தொடர்பாக பேட்டி அளித்தனர். அதில், ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கும் பெரும்பான்மை இருக்கிறது.
குழப்பம் இல்லை
கட்சிக்குள் குழப்பம் எதுவும் இல்லை. காங்கிரஸ் கட்சியில் அசோக் கெஹ்லட் ஆட்சிக்கு 109 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். எங்களிடம் 119 எம்எல்ஏக்கள் உள்ளனர். மீதம் இருக்கும் சிலர் இன்று காலை போன் மூலம் தங்கள் ஆதரவை தெரிவிக்க உள்ளனர். 109 பேர் அதிகாரபூர்வமாக கடிதம் எழுதி ஆதரவை தெரிவித்து உள்ளனர்.
இன்று காலை
மீதம் உள்ளவர்கள் இன்று காலை கடிதம் அளிப்பார்கள். எங்களுக்கு பெரும்பான்மை உள்ளது , காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வழிகாட்டுதலின் கீழ் நாங்கள் இயங்கி வருகிறோம். காங்கிரஸ் கட்சி சார்பாக இன்று நடக்கும் எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் முழு பலம் எல்லோருக்கும் தெரியும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பேட்டியில் தெரிவித்துள்ளனர்.
ஆனால் எதிரான கருத்து
ஆனால் இன்னொரு பக்கம் துணை முதல்வர் சச்சின் பைலட் இதற்கு எதிர்மாறாக கருத்து தெரிவித்துள்ளர். அதில், ராஜஸ்தானில் அசோக் கெஹ்லட் ஆட்சி பெரும்பான்மையை இழந்துவிட்டது. ஆட்சிக்கு அங்கு எம்எல்ஏக்கள் மற்றும் மக்கள் ஆதரவு இல்லை . எனக்கு 30 எம்எல்ஏக்கள் வரை ஆதரவு தருகிறார்கள் என்று சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். அவரின் இந்த கருத்து ராஜஸ்தான் அரசியலை உலுக்கி உள்ளது.