ராணுவத்தினருக்கான 'ஒன் ரேங்க்..ஒன் பென்ஷன்' திட்டத்தை செயல்படுத்துவோம்..: பிரதமர் மோடி உறுதி
டெல்லி: ராணுவத்தினருக்கான ஒன் ரேங்க்..ஒன் பென்ஷன் திட்டத்தை கொள்கை அளவில் ஏற்கிறோம்.. இத்திட்டத்தை விரைவில் செயல்படுத்துவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாட்டின் 69வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடி ஏற்று வைத்து சிறப்புரையாற்றினார்.
தமது சிறப்புரையில் இது தொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது:
20 ஆண்டுகளாக இந்த திட்டம் நிலுவையில் உள்ளது. ஒரே பதவி ஒரே ஓய்வுதியம் திட்டம் அனைத்து அரசுகளாலும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் இதற்கு எந்த தீர்வும் காணப்படவில்லை. என்னாலும் இதை தீர்க்க முடியவில்லை. ஆனால் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
கொள்கை அடிப்படையில் இந்த திட்டத்தை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்கான இறுதி நிலையில் நாங்கள் உள்ளோம். விரைவில் தகுதி அடிப்படையில் ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் வழங்கப்படும்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
அதிருப்தி
பிரதமர் மோடி உரையாற்றிய செங்கோட்டை அருகே உள்ள ஜந்தர் மைதானத்தில், ஒரே பதவி ஒரே ஓய்வுதிய திட்டத்தை நிறைவேற்ற கோரி உண்ணாவிரத்தில் ஈடுபட்டு வரும் முன்னாள் ராணுவத்தினர் பிரதமர் மோடியின் உரையை பிரம்மாண்ட தொலைக்காட்சிகளில் பார்த்துக்கொண்டிருந்தனர். தனது உரையில் இந்த திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து அறிவிக்காததால் அவர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.