மனிதர்களாக நாம் தோற்றுவிட்டோம்.... சிறுமிக்கு நீதி மறுக்கப்படாது - விகே சிங்
சிறுமி விவகாரத்தில் நாம் மனிதர்களாக தோற்றுவிட்டோம், ஆனால் அவருக்கு நீதி மறுக்கப்படாது, என்று மத்திய அமைச்சர் விகே சிங் கூறி உள்ளார்.
Recommended Video
டெல்லி: காஷ்மீர் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நாம் மனிதர்களாக தோற்றுவிட்டோம், ஆனால் அவருக்கு நீதி மறுக்கப்படாது என்று மத்திய அமைச்சர் விகே சிங் கூறி உள்ளார்.
ஜம்மு- காஷ்மீரின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யபட்டு கொலை செய்யப்பட்டார். இதற்கு பலரும் நீதி கேட்டு போராடி வருகின்றனர். ஹேஸ்டேக் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
ஜம்முவின் கத்துவா பகுதியில் உள்ளது கசானா என்ற கிராமம். கடந்த ஜனவரி 10 அன்று 8 வயது சிறுமி தனது வீட்டுக் குதிரையை, அருகில் உள்ள குளத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அதன் பிறகு அச்சிறுமி வீடு திரும்பவில்லை. இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஹிராநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
8 நாட்களுக்குப் பிறகு சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனையில் அச்சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
உடல் முழுவதும் கடுமையான காயங்களும் பல இடங்களில் தீக்காயங்கள் இருந்ததும் தெரியவந்தது. சிறுமிக்கு மயக்கமருந்து கொடுத்து, சிறை வைக்கப்பட்டு கொடூரமான முறையில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
விசாரணையில் ஹிராநகர் காவல் நிலையத்தின் சிறப்பு காவல்துறை அதிகாரியான கஜூரியா கைது செய்யப்பட்டுள்ளார். இது மதம் சார்ந்த பிரச்சினையாக மாறி விட்டது. குற்றவாளியை விடுவிக்க கோரி போராட்டமும் பேரணியும் நடத்தப்பட்டுள்ளது. இதில் பாஜக கொடியை ஏந்தி அமைச்சர்கள் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கத்துவா கொடூரச் சம்பவம் தொடர்பாக மத்திய அரசும் பாஜகவினரும் மவுனம் சாதித்து வரும் நிலையில் மத்திய இணை அமைச்சர் விகே சிங் கருத்தை பதிவு செய்து உள்ளார். "சிறுமி விவகாரத்தில் நாம் மனிதர்களாக தோற்றுவிட்டோம், ஆனால் அவருக்கு நீதி மறுக்கப்படாது," என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பாலிவுட் நட்சத்திரங்கள் பொதுமக்கள் சார்பில் சிறுமிக்கு நீதிகேட்டு ட்விட்டரில் பதிவிடப்பட்டு வருகின்றன.