இலங்கை நாடாளுமன்றத்தில் இப்போது எல்லோருக்கும் சம உரிமை கிடைத்து விட்டது: ரணில் பேட்டி
டெல்லி: இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, பிரதமர் நரேந்திர மோடியை இன்று மதியம் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதன்பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.
3 நாள் பயணமாக நேற்று இரவு இந்தியா வந்தடைந்தார் இலங்கை பிரமதர் ரணில் விக்ரமசிங்கே. டெல்லியிலுள்ள ஹைதராபாத் மாளிகையில் இன்று மதியம், பிரதமர் மோடியை சந்தித்தார்.
சந்திப்புக்கு பிறகு நண்பகல் 1 மணியளவில், இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது விக்ரமசிங்கே கூறியதாவது:
இலங்கையில், புதிதாக அமைந்துள்ள அரசு அனைத்து கட்சிகளுக்கும் நாடாளுமன்றத்தில் சம வாய்ப்பை வழங்கியுள்ளது. இலங்கையில் அதிகாரத்திற்கு போட்டியிட்ட இரு பெரும் கட்சிகளும், வெற்றி பெற்றுள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக உள்ளது. எனவே இந்த ஆட்சியில்தான், அனைத்து முக்கிய கட்சிகளுக்கும் நாடாளுமன்றத்தில் சம பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் இரு நாடுகளும் நடுவே வர்த்தக உடன்படிக்கையை கொள்கை ரீதியில் உருவாக்க உள்ளோம். அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இலங்கையில் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் வர்த்தக ஒப்பந்தங்கள் அமையும்.
இந்தியா-இலங்கை நடுவே, இன்று, நேற்றல்ல, 2500 வருடங்களாக வணிக உறவு உள்ளது. எனவே, இரு நாட்டு வணிக ஒப்பந்தங்கள் புதிதாக உருவாக்கப்படுவது கிடையாது.
இரு நாட்டு மீனவர் பிரச்சினை குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அப்பிர்ச்சினை தீர்க்க முயற்சி எடுக்கப்படும். சுற்றுலாவில் கூட்டுறவு பற்றியும் பேசினோம். இது தொடக்கம்தான். அடுத்த ஆண்டு படிப்படியாக ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பிராந்தியத்தில், தீவிரவாதத்தை ஒடுக்க, இரு நாடுகளும் ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்கும். இலங்கையின் வடக்கு மாகாணங்களில் அடிப்படை வசதி ஏற்படுத்த இந்தியா எடுத்துள்ள முயற்சிகளை வரவேற்கிறோம். இவ்வாறு ரணில் விக்ரமசிங்கே தெரிவித்தார்.