மக்கள் தொகையை கட்டுப்படுத்த தனிச் சட்டம் தேவை... பாஜக அமைச்சரின் சர்ச்சை பேச்சு
இந்தியாவில் சமூக நல்லிணக்கம் தேவை என்றால் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த தனிச் சட்டம் கொண்டு வரப்பட்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மத்திய பாஜக அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியுள்ளார்.
டெல்லி: சமூகத்தில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என்றால் மக்கள் தொகையை கட்டுப்படுத்த சட்டம் தேவை என மத்திய அமைச்சர் பேச்சு தேசிய அளவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசில் மத்திய அமைச்சராக இருப்பவர் கிரிராஜ் சிங். இவர் அவ்வப்போது பரபரப்பாக பேசி சர்ச்சையில் சிக்குவது வழக்கம். தற்போது அவரது பேச்சு மீண்டும் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த கிரிராஜ் சிங், இந்துக்களின் மக்கள் தொகை சரிவதால் சமூகத்தில் சமூக நல்லிணக்கம் குலைய வாய்ப்பு உள்ளது. எனவே, மக்கள் தொகையை கட்டுப்படுத்த புதிய சட்டம் தேவையாக உள்ளது.
குறைந்து வருகிறது..
1947ம் ஆண்டு முதல் தற்போது வரை இந்துக்களின் எண்ணிக்கை 90 சதவீதத்தில் இருந்து 72 சதவீதத்திற்கும் குறைவாக சரிந்து விட்டது. இந்தியாவில் மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டத்தை அறிமுக படுத்த தவறினால் சமூக நல்லிணக்கம் குலையும்.
இந்துக்கள் பாதுகாப்பு
இந்துக்களின் எண்ணிக்கை குறைந்தால் சமூக அமைதி பாதிக்கப்படும். அதனால் இந்துக்களின் பாதுகாப்பிற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை தீவிரமாக எடுக்க வேண்டும்.
யார் சிறுபான்மை
சிறுபான்மை என்பதை மறு வரையறை செய்ய வேண்டும். இதற்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக உள்ளேன். முதலில் நான் ஒரு இந்து. பின்னர்தான் நான் பாஜக கட்சிக்காரன்.
யோகா கட்டாய பாடம்
பாஜக வேட்பாளரை ஆதரிக்க கூடாது என நிதிஷை லாலு வலியுறுத்துகிறார். காட்டாட்சியின் பிரசார தூதர்தான் லாலு. மக்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டுமானால் அனைத்து பள்ளிகளிலும் யோகாவை கட்டாய பாடமாக ஆக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தற்போது அவரது இந்த பேச்சு மீண்டும் தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குறைந்துவிட்ட இந்துக்கள் எண்ணிக்கை
2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்துக்களின் எண்ணிக்கை 79.8 சதவீதம் உள்ளது. 1951ம் ஆண்டில் 84.1 சதவீதமாக காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்து பெண்களுக்கும் முகத்திரை
ஏற்கெனவே அமைச்சர் கிரிராஜ் சிங், மக்கள் தொகைக்கான விதிகள் மாற்றி அமைக்காவிட்டால் நமது இந்து பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருக்காது. பாகிஸ்தானைப்போன்று இந்தியாவில் வாழும் இந்து பெண்களும் முகத்திரையை அணிய வேண்டி இருக்கும்.
இஸ்லாமியர்களுக்கு 2 குழந்தைகள்
இஸ்லாமியர்கள் பெண்கள் கண்டிப்பாக இரண்டு குழந்தைகள்தான் பெற்றுக் கொள்ள வேண்டும் என சட்டம் கொண்டு வரவேண்டும். இரண்டு குழந்தைகள் கொள்கை நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் நமது இந்து பெண்கள் பாதுகாப்பாக இருக்க மாட்டர்கள் என்று கூறியிருந்தது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.