நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெல்வோம்.. புதிய திட்டம் போடும் கமல்நாத்.. என்ன பிளான்? நடக்குமா?
நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதை எதிர்கொள்ள தயார் என்று முதல்வர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.
போபால்: மத்திய பிரதேசத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதை எதிர்கொள்ள தயார் என்று முதல்வர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் காங்கிரசில் இளம் மற்றும் முக்கிய தலைவராக இருந்த ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி உள்ளார். இதுதான் அங்கு அரசியல் மாற்றங்கள் நடக்க காரணம். இது முழுக்க முழுக்க காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி பிரச்சனை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் மத்திய பிரதேசத்தில் ஆட்சி கவிழும் நிலையில் இருக்கிறது. காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் 23 பேர் ஆட்சிக்கு எதிராக திரும்பி உள்ளனர். இதில் 22 எம்எல்ஏக்கள் பெங்களூரில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
என்ன தீர்மானம்
இந்த நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதை எதிர்கொள்ள தயார் என்று முதல்வர் கமல்நாத் தெரிவித்துள்ளார். அதில், நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கண்டிப்பாக நாங்கள் வெற்றிபெறுவோம். எங்களிடம் போதுமான பெரும்பான்மை இருக்கிறது. ஆட்சி அமைக்க தேவையான இடங்கள் எங்களிடம் இருக்கிறது. கண்டிப்பாக காங்கிரஸ் ஆட்சி தொடரும் என்று கமல்நாத் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் நிலை
இதற்காக காங்கிரஸ் சில திட்டங்களை வைத்துள்ளது. அதன்படி எம்எல்ஏக்களின் ராஜினாமாவை சபாநாயகர்தான் ஏற்க வேண்டும். ஆனால் சபாநாயகர் இப்போதைக்கு அதை ஏற்க வாய்ப்பில்லை. அங்கு பட்ஜெட் கூட்டத்தொடர் 16ம் தேதிதான் நடக்கிறது. அதுவரை கண்டிப்பாக ராஜினாமாவை ஏற்க வாய்ப்பில்லை என்கிறார்கள். பெங்களூரில் இருக்கும் எம்எல்ஏக்களை மீண்டும் தங்கள் பக்கம் இழுக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
பெங்களூர் நிலை
பெங்களூரில் உள்ள எம்எல்ஏக்களை சந்திக்க இதற்காக காங்கிரஸ் குழு ஒன்றை அனுப்ப உள்ளது. இதில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் இடம்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த குழு அங்கிருக்கும் அதிருப்தி எம்எல்ஏக்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும். அவர்களுக்கு முக்கியமான சலுகைகள் வழங்குவதாக கூறும் . இதன் மூலம் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெல்ல முடியும் என்று காங்கிரஸ் நம்புகிறது.
வாய்ப்பு இல்லை
ஆனால் அதற்கு எல்லாம் வாய்ப்பு இல்லை. கண்டிப்பாக எம்எல்ஏக்கள் யாரும் மீண்டும் காங்கிரஸ் பக்கம் செல்ல மாட்டார்கள். கர்நாடகாவில் ஏற்பட்ட நிலைதான் இங்கும் ஏற்பட போகிறது. எல்லாம் பாஜக சார்பாக இடைத்தேர்தலில் போட்டியிட போகிறார்கள். அவர்களுக்கு அமைச்சர் பதவியை உறுதி செய்துள்ளோம் என்று, பாஜக சார்பாக தெரிவிக்கிறார்கள். இதனால் மத்திய பிரதேச அரசியல் சீக்கிரம் கிளைமேக்ஸ் வரும் என்கிறார்கள்.