"ரகசியத்தை" உடைக்க நம்மிடம் போதிய ஆட்கள் இல்லை.. மாஜி டிஆர்டிஓ தலைவர் கவலை
டெல்லி: ரகசிய சங்கேத வார்த்தைகளான, "கோட்"களை உடைத்து அதன் உள்ளர்த்தத்தை கண்டுபிடிக்கும் நிபுணர்கள் இந்தியாவில் குறைவாக உள்ளனர் என்று டிஆர்டிஓ அமைப்பின் முன்னாள் தலைவர் வி.கே.சரஸ்வத் கூறியுள்ளார்.
தீவிரவாத அமைப்புகள் மிகுந்த முன்ஜாக்கிரதையுடன் செயல்படக் கூடியவை. ரகசிய கோட் வேர்ட்களை அவை பயன்படுத்துகின்றன. அதேபோல பிற நாடுகளின் உளவு அமைப்பினரும் நமது நாட்டில் உளவாளிகளை வைத்துள்ளனர். இவர்கள் அனைவருமே கோட் வேர்ட் எனப்படும் ரகசிய சங்கேத வார்த்தைகளைத்தான் பயன்படுத்துவார்கள். இந்த சீக்ரெட் கோட்களின் உள்ளர்த்தத்தை கண்டுபிடிப்பது நிபுணர்களுக்கு மட்டுமே சாத்தியமாகும்.
இதை சரியாக கண்டுபிடித்து உண்மையான அர்த்தத்தைக் கண்டுபிடிக்கும் நிபுணர்களுக்கு cryptographers என்று பெயர் உண்டு. ஆனால் இப்படிப்பட்ட நிபுணர்களுக்கு இந்தியாவில் பெரும் பற்றாக்குறை இருப்பதாக டிஆர்டிஓ முன்னாள் தலைவர் வி.கே.சரஸ்வத் கூறியுள்ளார். இந்தியாவுக்கு எதிரான சைபர் தாக்குதலைத் தடுக்க கிரிப்டோகிராபர்கள் அதிக அளவில் தேவைப்படுகிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்திய புள்ளியியல் கழகத்தின் நிறுவனரான பி.சி.மஹலநோபிஸின் 122வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு சரஸ்வத் பேசுகையில், கிரிப்டோகிராபியையும், கிரிப்டோ அனாலிசிசையும் தேர்வு செய்யும் புள்ளியில் நிபுணர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. நாட்டுக்கு இதுபோன்ற நிபுணர்கள் பெருமளவில் தேவை. அப்போதுதான் நாட்டின் சைபர் பாதுகாப்பு உறுதி செய்ய்படும் என்றார் அவர்.
கிரிப்டோகிராபி என்பது ரகசிய கோடுகளை எழுதுவதாகும். கிரிப்டோ அனாலிசிஸ் என்பது ரகசிய கோடுகளில் பொதிந்துள்ளவற்றை வெளிக் கொணருவதாகும். சைபர் பாதுகாப்பில் புள்ளியியல் துறைக்கு மிக முக்கியப் பொறுப்பு உண்டு என்று கூறும் சரஸ்வத், சைபர் கிரைம், சைபர் தீவிரவாதம் மற்றும் சைபர் மிரட்டல் மதிப்பீடு ஆகியவை சைபர் பாதுகாப்பின் முக்கியமான மூன்று அம்சங்களாகும் என்றார்.
1994ம் ஆண்டுக்குப் பிறகு சைபர் மிரட்டல்கள் அதிகரித்துள்ளன. எனவே கிரிப்டோகிராபர்களின் முக்கியத்துவமும் அதிகரித்துள்ளது என்றும் சரஸ்வத் கூறியுள்ளார்.
எனவே விஞ்ஞானிகள் கிரிப்டோ அனாலிசிஸ் மற்றும் கிரிப்டோகிராபர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றும் சரஸ்வத் தெரிவித்தார்.