வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2024 மே மாதம் வரை கூட போராட தயார் என அறிவிப்பு
நாக்பூர்: பாரதிய கிசான் யூனியன் (பி.கே.யூ) தலைவர் ராகேஷ் டிக்கைட் நேற்று நாக்பூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக "2024ம் ஆண்டு மே மாதம் வரை விவசாயிகள் போராட தயாராக இருப்பதாக கூறினார்.
டெல்லி எல்லைகளில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தை "கருத்தியல் புரட்சி" என்று கூறிய ராகேஷ் டிக்கைட், குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி) மீது சட்டப்பூர்வ உத்தரவாதம் வேண்டும் என்றார்.
விவசாயிகள் துறையில் பெரிய சீர்திருத்தங்கள் என மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தள்ளது. இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி 2020 நவம்பர் 26 முதல் டெல்லி அருகே விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
எதிர்க்கட்சிகள் பலமாக இருந்தால்... நாங்கள் ஏன் போராட போகிறோம்... கொந்தளிக்கும் விவசாயிகள்
இடைத்தரகர்கள் இல்லை
இந்த வேளாண் சட்டங்கள் இடைத்தரகர்களை அகற்றி விவசாயிகள் நாட்டில் எங்கும் விற்க அனுமதிக்கிறது.. எவ்வாறாயினும், புதிய சட்டங்கள் குறைந்த பட்ச ஆதார விலையை அகற்றுவதற்கும், மண்டி முறையை நீக்குவதற்கும், பெரிய நிறுவனங்களின் தயவில் தங்களை கொண்டு செல்லும் என்று விவசாயிகள் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
சட்டங்கள் நிறுத்திவைப்பு
விவசாயிகள் நீண்ட நாட்களாக போராடி வருவதை பார்த்த உச்ச நீதிமன்றம், கடந்த செவ்வாயன்று மூன்று புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை தற்காலிமாக நிறுத்தி வைத்துள்ளது. டெல்லி எல்லையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மத்திய மற்றும் விவசாயிகள் சங்கங்களுக்கு வைத்துள்ள கோரிக்கைகளை தீர்க்க நான்கு பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது.
பாரதிய கிசான் யூனியன்
இந்நிலையில் பாரதிய கிசான் யூனியன் (பி.கே.யூ) தலைவர் ராகேஷ் டிக்கைட் நேற்று நாக்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் விவசாயிகள் எவ்வளவு காலம் இப்படி போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று கேட்கப்பட்டதற்கு, "நாங்கள் 2024 மே மாதம் வரை கூட போராட்டத்தில் ஈடுபட தயாராக உள்ளோம். எங்கள் கோரிக்கை மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும். குறைந்த பட்ச ஆதார விலை உறுதி செய்யப்பட வேண்டும். 2024ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் வரையிலும் போராடுவோம்
பணக்கார விவசாயி
இந்த போராட்டம் "பணக்கார விவசாயிகளால்" தூண்டப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை முற்றிலும் நிராகரிக்கிறேன். கிராமங்கள் முதல் நகரம் வரை பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் இணைந்துள்ளனர். டெல்லியில் இருந்து தொடங்கப்பட்டது விவசாயிகளின் கருத்தியல் புரட்சி, அது நிச்சயம் தோல்வி அடையாது. மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை விவசாயிகள் மீண்டும் கிராமங்களுக்கு செல்ல விரும்பவில்லை" என்றார்.