பிரதமர் மோடியை உலகம் அறிந்தது 'கோத்ரா' படுகொலை சம்பவங்களால்தானே... சிவசேனாவின் 'வஞ்சப் புகழ்ச்சி'
டெல்லி: தாத்ரியில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக வதந்தியை கிளப்பி இஸ்லாமிய முதியவரை படுகொலை செய்த சம்பவத்துக்கு வேதனை தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடியை சிவசேனா கடுமையாக விமர்சித்துள்ளது. குஜராத்தில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களை படுகொலை செய்த "கோத்ரா சம்பவ"ம்தான் பிரதமர் மோடியை உலகுக்கு எடுத்துக் காட்டியது; அதற்காகத்தான் மோடியை நாங்களும் மதிக்கிறோம் என்று சிவசேனா வஞ்சப் புகழ்ச்சியாக கூறியிருப்பது பா.ஜ.க.வை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் தாத்ரி மாவட்டத்தில் இஸ்லாமிய முதியவர் இக்லால் மாட்டிறைச்சி சாப்பிட்டார் என்ற வதந்தியை கிளப்பிவிட்டு மதவெறி கும்பல் அவரை அடித்து படுகொலை செய்தது. மும்பையில் பாகிஸ்தான் பாடகர் குலாம் அலியின் நிகழ்ச்சிக்கு சிவசேனா எதிர்ப்பு தெரிவித்து நடத்தவிடாமல் செய்தது.
இச்சம்பவங்கள் குறித்து பிரதமர் மோடி மவுனமாக இருப்பதாக பல்வேறு தரப்பினரும் அரசியல் கட்சிகளும் கடுமையாக சாடியிருந்தனர். இந்நிலையில் ஆனந்தபஜார் பத்திரிகா என்ற நாளிதழுக்கு பிரதமர் மோடி இது தொடர்பாக பேட்டியளித்திருந்தார். அதில் தாத்ரி சம்பவம் வேதனை தருகிறது; குலாம் அலி நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது துரதிருஷ்டவசமானது எனக் குறிப்பிட்டிருந்தார்.
பிரதமர் மோடியின் இந்த கருத்துக்கு சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ரவுத் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடியை குஜராத்தின் கோத்ரா சம்பவம் மூலமே உலகம் அறிந்து கொண்டது. அதற்காக நாங்கள் மோடிஜிக்கு மதிப்பளிக்கிறோம். மும்பையில் குலாம் அலி நிகழ்ச்சிக்கு தடை, கசூரி நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு ஆகியவற்றை பிரதமர் மோடி துரதிருஷ்டவசமானது எனக் கூறினால் அது அனைவருக்கும் துரதிருஷ்டவசமானதுதான் என கூறியுள்ளார்.
கோத்ரா சம்பவம்
குஜராத்தில் 2002ஆம் ஆண்டு முதல்வராக நரேந்திர மோடி பதவி வகித்த போது அயோத்தியில் இருந்து இந்து சாமியார்கள் திரும்பிக் கொண்டிருந்த ரயில் கோத்ரா என்ற இடத்தில் தீ வைத்து எரிக்கப்பட்டது. அதில் 59 பேர் உயிரிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் மிக மோசமான மதவன்முறை வெடித்தது. அரசு ஆவணங்களின்படி 1,044 இஸ்லாமியர்கள் மிகக் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலைகளை தடுக்காமல் வேடிக்கை பார்த்ததுடன் காவல்துறையினர் கடமையை செய்யவிடாமல் தடுத்தவர் முதல்வராக இருந்த மோடி என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.
ஆனால் இச்சம்பவத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எந்த தொடர்பும் இல்லை என நீதி விசாரணை அமைப்புகள் கூறினாலும் மோடிதான் பொறுப்பானவர்; இஸ்லாமியர் படுகொலையை தடுக்கக் கூடாது என உத்தரவிட்டவர் மோடிதான் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்தும் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இதுதான் கோத்ரா சம்பவம் என்பது. இந்த கோத்ரா சம்பவத்தில் மோடிக்கு தொடர்பில்லை என பா.ஜ.கவும் கூறிவரும் நிலையில் சிவசேனாவோ, கோத்ரா படுகொலைச் சம்பவம் மூலமே நீங்கள் உலகம் முழுவதும் அறியப்பட்டீர்கள்... அதற்காகத்தான் நாங்களும் உங்களை மதிக்கிறோம் என்று கூறியிருப்பது பாரதிய ஜனதா கட்சியை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.