நாடாளுமன்றம், குடியரசு தலைவர் மாளிகையையும் இடிக்க வேண்டும்.. சமாஜ்வாதி எம்எல்ஏ ஆசம்கான் பகீர்
டெல்லி: தாஜ்மகால் மட்டுமல்ல, குடியரசு தலைவர் மாளிகை, நாடாளுமன்றம் போன்றவையும், அடிமை சின்னம் என்பதால் அவற்றையும் அழிக்க வேண்டும் என்று, சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான ஆசம் கான் கூறியுள்ளார்.
தாஜ்மகால் அடிமை சின்னம் என்றும் இந்தியாவை முகலாயர்கள் ஆட்சி செய்ததன் நினைவு சின்னமான அதை இந்திய வரலாற்றில் இருந்து அகற்ற வேண்டும் என்று உத்தர பிரதேச பாஜக எம்எல்ஏ சங்கீத் சோம் கூறியிருந்தார்.
இந்த நிலையில், எதிர்க்கட்சியான சமாஜ்வாதியின் எம்எல்ஏ, ஆசம் கான் நிருபர்களிடம் கூறுகையில், நம்மை அடிமை செய்தவர்கள் விட்டுச் சென்ற நினைவு சின்னங்களை அழித்தொழிக்க வேண்டும். இதைத்தான் நான் முன்பும் சொல்லியுள்ளேன்.
நாடாளுமன்றம், குதுப்மினார், ராஷ்ரபதி பவன், செங்கோட்டை, தாஜ்மகால் போன்ற எல்லாவற்றையும் இடித்துவிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். ஆனால் இதை ஆசம்கான் கிண்டல் தொனியில் கூறினாரா, சீரியசாகவே கூறினாரா என்பது இன்னும் தெரியவில்லை.
சங்கீத் சோம் நேற்றுமுன்தினம் கட்சி கூட்டத்தில் பேசுகையில், "தாஜ்மகாலை இந்திய வரலாற்றிலிருந்து நீக்க பலரும் அதிருப்தி தெரிவிக்கிறார்கள். நீங்கள் எந்த வரலாறை பேசுகிறீர்கள்? தாஜ்மகாலை உருவாக்கியவர் தனது சொந்த தந்தையை சிறையில் அடைத்தார். ஹிந்துஸ்தானில் இருந்து இந்துக்களை துடைத்தெறிய நினைத்தார். இதுபோன்ற நபர்களை நமது வரலாற்றில் வைத்துள்ளது துரதிருஷ்டவசமானது. வரலாறு மாறும் என்பதை உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். ராமர், வீர சிவாஜியின் வரலாறுதான் இந்தியாவுக்கு தேவை" என்று பேசியிருந்தார்.