கால்சென்டர் பெண் ஊழியரை பலாத்காரம் செய்ய தூண்டியது என்ன தெரியுமா? குற்றவாளிகள் பரபர வாக்குமூலம்
பெங்களூர்: பாலியல் பலாத்காரம் செய்தாலும், மானம் போய்விடும் என்று நினைத்து, அதுபற்றி பெண்கள் புகார் அளிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில்தான் பலாத்காரத்தில் ஈடுபட்டோம் என்று, பெங்களூர் கால்சென்டர், பெண் ஊழியர் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இரு குற்றவாளிகளும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
பெங்களூரில் பணியாற்றும் ம.பியை சேர்ந்த, 23 வயது கால்சென்டர், பெண் ஊழியர் சனிக்கிழமை இரவு பலாத்காரம் செய்யப்பட்டார். ஓடும் வேனில் அவர் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டார்.
சிகிச்சை
நள்ளிரவில் வேனில் இருந்து இறக்கிவிடப்பட்ட அவர், கடும் உடல் பாதிப்பால், செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திங்கள்கிழமை வீடு திரும்பினார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேன் கண்டுபிடிப்பு
இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் சம்பவம் நடந்த வேன் KA 03 B-1863 என்ற பதிவு எண் கொண்டது என்பதை போலீசார் அறிந்தனர். இந்திராநகரை சேர்ந்த சங்கர் என்பவருக்கு சொந்தமான வேன் அது என்பதும் தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடத்தியபோது, எஸ்.ஆர்.எஸ். நிறுவனத்திடம் ஒப்பந்த அடிப்படையில் தனது வேன் இயங்கிவருவதாக தெரிவித்தார்.
குற்றவாளி அடையாளம்
எஸ்.ஆர்.எஸ் நிறுவனத்திடம் விசாரித்தபோது, அவர்கள் பாதிக்கப்பட்ட பெண் பணியாற்றிய பொம்மனஹள்ளியிலுள்ள, ஹெச்.ஜி.எஸ் என்ற பிபிஓ நிறுவனத்திற்கு வாடகைக்கு விட்டுள்ளதாக தெரிவித்தனர்.
சம்பவத்தன்று வேனை இயக்கியது யோகேஷ் என்ற டிரைவர் எனவும் தகவல் கொடுத்தனர்.
ஸ்பாட் விசாரணை
இதையடுத்து போலீசார் யோகேஷை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தனது உறவுக்காரர் சுனில் என்பவரோடு சேர்ந்து பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து சுனிலும் கைது செய்யப்பட்டார். இருவரையும் சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்து சென்று ஸ்பார்ட் விசிட் விசாரணை நடத்தியுள்ளனர் போலீசார்.
பலாத்கார திட்டம் இல்லை
இருவரும் போலீசில் அளித்துள்ள வாக்குமூலம்: ஆளில்லாத வேனில் தனியாக மாட்டிக்கொண்ட பெண்ணிடமிருந்து பணம், செல்போனை பறித்துவிடலாம் என்றுதான் முதலில் திட்டமிட்டோம். ஆனால், அவரது அழகில் மயங்கி, பலாத்காரம் செய்யும் முடிவுக்கு வந்தோம்.
காரணம் இதுதான்
பலாத்காரம் செய்தாலும், அந்த பெண் போலீசில் தெரிவிக்க மாட்டார் என்று நினைத்தோம். ஏனெனில் போலீசில் தெரிவித்து விவகாரம் பிறருக்கு தெரியவந்தால், அவமானம் என்று எண்ணி பெண்கள் புகார் அளிக்க மாட்டார்கள் என்பது எங்கள் திட்டமாக இருந்தது. எனவேதான், தைரியமாக அவரை பலாத்காரம் செய்தோம். வண்டியில் கிடந்த சில இரும்பு சாமான்களை காண்பித்து, குத்திவிடுவோம் என்று மிரட்டியதால், முதலில் கத்தி, கூச்சலிட்ட அந்த பெண், பிறகு அமைதியாக இருந்தார்.
போலீசுக்கு தெரிந்துவிட்டது
ஒருவர் பலாத்காரம் செய்யும்போது மற்றொருவர் அவரை மிரட்டும் வேலையில் ஈடுபட்டோம். இப்படித்தான் இருவரும் சில மணி நேரங்கள மாறி மாறி பலாத்காரம் செய்தோம். ஆனாலும், அந்த பெண் போலீசில் புகார் அளித்துவிட்டார். இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இவ்வாறு அந்த காமுகர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
மருத்துவமனையால் அம்பலம்
குற்றவாளிகள் நினைத்ததை போலவே, அந்த பெண்ணும் போலீசில் புகார் அளிக்கும் முடிவில் இல்லை. ஆனால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்தபோது, மருத்துவமனை நிர்வாகம், இது மெடிக்கோ-லீகல் சம்மந்தப்பட்டது என்பதால் போலீசாருக்கு தகவல் கொடுத்தது. அதன்பேரில்தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை பலாத்காரத்தின்போது அந்த பெண்ணுக்கு காயம் ஏற்படாமல் இருந்திருந்தால், மருத்துவமனை செல்லாமலும், போலீசுக்கு தகவல் செல்லாமலும் விஷயம் மூடி மறைத்திருக்கப்படும். இதுபோன்ற சூழ்நிலைகளைத்தான் காமுகர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பது அவர்களின் வாக்குமூலத்தில் இருந்து தெளிவாகிறது.