தலைமை நீதிபதி மீதான இம்பீச்மென்ட் வழக்கு.. நீதிபதிகள் பெஞ்ச் அமைத்ததில் மர்மம்: கபில் சிபல்
5 நீதிபதிகள் எந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனர் என்ற விவரத்தை அறிந்து கொள்ள வேண்டியது மனுதாரரின் கடமையாகிறது. சட்டப்படியும், இதை அறிய, மனுதாரருக்கு உரிமையுள்ளது.
Recommended Video
டெல்லி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பதவி நீக்க வழக்கு பற்றி காங்கிரஸ் எம்.பி.க்கள் தரப்பில் ஆஜரான முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் விளக்கம் அளித்தார்.
உச்சநீதிமன்றத்தில் வழக்குகளை விசாரணைக்கு ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவிநீக்க தீர்மானம் கொண்டு வர அனுமதிக்குமாறு ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடுவிடம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் நோட்டீஸ் கொடுத்தனர்.
ஆனால் இந்த நோட்டீசை வெங்கையா நாயுடு ஏற்கமறுத்தார். இதை எதிர்த்து காங்கிரஸ் எம்பிக்களான பிரதாப் சிங் பஜ்வா, அமீ ஹர்ஷத்ரே யாஜ்னிக் ஆகியோர் சார்பில், கட்சியின் மூத்த தலைவரும், சட்ட வல்லுநருமான கபில் சிபல் இந்த வழக்கை தாக்கல் செய்தார்.
இவ்வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி ஏ.கே.சிக்ரி, தலைமையிலான இந்த அமர்வில் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே என்.வி.ரமணா, அருண்மிஸ்ரா, ஏ.கே.கோயல் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். முக்கியமான வழக்கை சீனியர் நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் விசாரிக்கவில்லையே என்ற கேள்வி காங்கிரஸ் வட்டாரத்தில் எழுந்தது.
எனவே, 5 நீதிபதிகளை நியமித்தது எப்படி என்ற கேள்வியை கபில் சிபல் முன் வைத்தார். அதற்கு பதிலளிக்க நீதிபதிகள் பெஞ்ச் மறுத்துவிட்டது. எனவே வழக்கை வாபஸ் பெற்றார் கபில் சிபல்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய கபில் சிபில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் பெஞ்ச் நீதித்துறை மரபுபடி அமைக்கப்படவில்லை. அரசியல் சாசனத்தின் 145 சி பிரிவின்படி, அரசியல் சாசன விவகாரம் தொடர்பான வழக்கில் குறைந்தபட்சம் 5 நீதிபதிகள் விசாரணை நடத்த வேண்டும்.
அப்படி விசாரணை நடத்தும் நீதிபதிகளை, நிர்வாக ஆர்டர் என்ற அடிப்படையில், தலைமை நீதிபதி நியமிக்க முடியாது. ஜுடிஷியல் ஆர்டர்தான் தேவை. ஆனால், இந்த வழக்கில் ஜுடிஷியல் ஆர்டர் பிறப்பிக்கப்படவில்லை.
எனவே 5 நீதிபதிகள் எந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனர் என்ற விவரத்தை அறிந்து கொள்ள வேண்டியது மனுதாரரின் கடமையாகிறது. சட்டப்படியும், இதை அறிய, மனுதாரருக்கு உரிமையுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.