மாட்டுக் கறி சாப்பிட்டதற்குத் தண்டனை.. பாலியல் பலாத்காரம்.. இது ஹரியானா அராஜகம்!
மேவாத், ஹரியானா: ஹரியானா மாநிலம் மேவாத் நகரில் மாட்டுக் கறி சாப்பிட்டதற்காக இரண்டு பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட செயல் அனைவரையும் அதிர வைத்துள்ளது.
இந்த இரண்டு பெண்களும் 2 வாரத்திற்கு முன்பு ஒரு கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் அந்தப் பெண்களில் ஒருவர், தாங்கள் மாட்டுக் கறி சாப்பிட்டதற்காகவே பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் அப்பெண்கள் சமூக சேவகர் ஷப்னம் ஹஸ்மி முன்னிலையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது தங்களுக்கு நடந்த கொடுமை குறித்து கண்ணீர் மல்க விவரித்தனர்.
ஒரு பெண் கூறுகையில், எங்களிடம் அந்தக் கும்பல் நீங்கள் மாட்டுக் கறி சாப்பிடுவீர்களா என்று கேட்டது. அதற்கு நாங்கள் இல்லை என்று கூறினோம். ஆனால் அவர்கள், இல்லை பொய் சொல்கிறீர்கள். நீங்கள் சாப்பிடுகிறீர்கள் என்று கூறி அதற்குத் தண்டனைதான் இது என்று கூறி பலாத்காரம் செய்தனர் என்றார்.
ஆனால் இப்பெண்களோ அல்லது இவர்களின் பெற்றோரோ முதலில் கொடுத்த புகாரில் இந்தக் குற்றச்சாட்டைத் தெரிவிக்கவில்லை என்று போலீஸார் கூறுகிறார்கள். மேலும் பசுக்கள் பாதுகாப்பு குழுவினர் யாரும் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டதாக தகவல் இல்லை என்றும் போலீஸ் தரப்பு கூறுகிறது.
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களில் ஒருவருக்கு வயது 14, இன்னொருவருக்கு 20 ஆகிறது. ஆகஸ்ட் 24ம் தேதி மோத் நகரில் உள்ள அவர்களது வீட்டில் இந்த கொடுமைக்குள்ளானார்கள் இவர்கள் இருவரும். இருவரும் சகோதரிகள் ஆவர். சம்பவத்தின்போது இவர்களது அத்தையும், மாமாவும் அந்தக் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டு விட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 4 பேர் கைது செய்யபப்பட்டுள்ளனர்.