மாவட்டந்தோறும் மலிவு விலை மெடிக்கல் திறக்கிறது மத்திய அரசு
பெங்களூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அனந்தகுமார் "மழைக்காலத்தில் விவசாயிகளுக்கு தேவையான உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மூடிக்கிடக்கும் உரத்தொழிற்சாலைகளை மேம்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும். அசாம் மற்றும் ராஜஸ்தானில் இரு உர ஆலைகளை திறக்க திட்டமிட்டுள்ளோம். பெருகிவரும் தேவைக்கு ஏற்ப உரக்கொள்கையில் மாற்றம் கொண்டுவரப்படும்.
மருந்துகளின் விலையை குறைப்பது அரசின் முதல் முன்னுரிமையாக இருக்கும். குறிப்பாக உயிர்காக்கும் மருந்துகளின் விலையை 25 சதவீதம் முதல் 40 சதவீதம்வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் தலா ஒரு மலிவு விலை மெடிக்கல்கள் திறக்கப்பட்டு அதன் மூலம் குறைந்த விலை மருந்துகள் ஏழை எளிய மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மலிவு விலை மருந்தகங்களில் 500 வகையான மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கும். இவ்வாறு அமைச்சர் அனந்தகுமார் தெரிவித்தார்.
கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடந்தபோது மலிவு விலை மருந்தக திட்டம் அம்மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு இப்போதும் தொடர்வது குறிப்பிடத்தக்கது.