அயோத்தியில் 4 மாதங்களில் விண்ணை தொடும் பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்படும்: அமித்ஷா
ராஞ்சி: அயோத்தியில் 4 மாதங்களில் விண்ணை தொடும் பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் அமித்ஷா இன்று பேசியதாவது:
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது இந்தியர்களின் 100 ஆண்டுகால கோரிக்கை.
இன்னும் 4 மாதங்களில் விண்ணைத் தொடும் பிரமாண்டமான ராமர் கோவில் அயோத்தியில் கட்டப்படும். ஆங்கிலேயர்களுக்கு எதிரான பழங்குடிகளின் போராட்டம் தீரமிக்கது.
மீர் ஜாபர் போன்ற துரோகிகளால்தான் பிரிட்டிஷ் ராஜ்ஜியமே இந்தியாவில் அமைந்தது. இன்றும் கூட மீர் ஜாபர் போன்ற துரோகிகளை அடையாளம் கண்டு அவர்களை உங்களின் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்க வேண்டாம்.
56 இஞ்ச் மார்பளவு கொண்ட பிரதமர் மோடிதான் இந்த தேசத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்கிறார். ஆகையால் பாஜகவுக்கே வாக்களிக்க வேண்டும்.
ஜார்க்கண்ட்டில் காங்கிரஸ் ஆதரவுடன் முதல்வராக விரும்புகிறார் ஹேமந்த் சோரன். ஜார்க்கண்ட் தனி மாநில கோரிக்கையின் போது இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது யார் என ஹேமந்த் சோரன் சொல்வாரா? உங்களுக்கு நினைவு இல்லாமல் போனால் சிபுசோரனிடம் கேளுங்கள்..
காங்கிரஸும் ஆர்ஜேடியும் இணைந்துதான் ஜார்க்கண்ட் இளைஞர்களை படுகொலை செய்தனர். வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசுதான் ஜார்க்கண்ட் மாநிலத்தை உருவாக்கியது.
இப்போது அதே காங்கிரஸுடன் முதல்வர் பதவிக்காக கூட்டணி அமைத்திருப்பதற்கு வெட்கப்பட வேண்டாமா? ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சல்களை 20 அடி பள்ளத்தில் ஆழ குழி தோண்டி புதைத்திருக்கிறது மோடியின் மத்திய அரசு.
ஜார்க்கண்ட் இளைஞர்கள் நாட்டின் பாதுகாப்புப் படையில் இருக்கின்றனர். பனிமலைகளில் ஜார்க்கண்ட் இளைஞர்கள் இந்த தேசத்தை பாதுகாக்கின்றனர். இவ்வாறு அமித்ஷா கூறினார்.