சி.ஏ.ஏ., 370-வது பிரிவு ரத்து நடவடிக்கையில் ஒருபோதும் பின்வாங்கமாட்டோம்: பிரதமர் மோடி திட்டவட்டம்
வாரணாசி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவு ரத்து, குடியுரிமை சட்ட திருத்தம் ஆகிய நடவடிக்கைகளில் ஒருபோதும் பின்வாங்கப் போவது இல்லை என்று பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
வாரணாசியில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது:
தேசத்தின் நன்மை கருதியே காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது. அதேபோல் குடியுரிமை சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது.
எத்தனை அழுத்தங்கள் கொடுக்கப்பட்டாலும் இந்த நடவடிக்கைகளில் நாங்கள் உறுதியாக இருப்போம். ஒருபோதும் பின்வாங்க மாட்டோம். உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையிலும் இந்த ஒரு முடிவுகளையும் எடுத்திருக்கிறோம்.
நாங்கள் எடுத்த முடிவை செயல்படுத்துவதில் உறுதியாக இருப்போம். அதில் எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
முன்னதாக வாரணாசியில் 63 அடி உயர பண்டிட் தீனதயாள் உபாத்யாயா சிலையை வாரணாசியில் மோடி திறந்து வைத்தார். 430 படுக்கைகள் கொண்ட சிறப்பு மருத்துவமனையையும் வாரணாசியில் மோடி இன்று திறந்து வைத்தார்.