ஓபிஎஸ் வரலன்னாலும் இரட்டை இலை எங்களுக்குதான்.. அடித்து சொல்லும் சிவி சண்முகம்!
ஓபிஎஸ் இணையாவிட்டாலும் இரட்டை இலைச்சின்னம் எங்களுக்குதான் என சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
டெல்லி: ஓபிஎஸ் இணையாவிட்டாலும் இரட்டை இலைச்சின்னம் எங்களுக்குதான் என சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். 95 சதவீத நிர்வாகிகள், சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாகவும் அவர் சிவி சண்முகம் கூறியுள்ளார்.
இரட்டை இலைச்சின்னத்துக்கு சசிகலா கோஷ்டியும் ஓபிஎஸ் கோஷ்டியும் போட்டிப்போட்டதால் தேர்தல் ஆணையம் இரட்டை இலைச்சின்னத்தை முடக்கியது. இதுதொடர்பான வழக்கு டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வருகிறது.
இதைத்தொடர்ந்து இரட்டை இலைச்சின்னத்தை பெறுவதற்காக ஓபிஎஸ் மற்றும் சசிகலா அணியினர் தீயாக வேலை செய்து வருகின்றனர். இரு அணிகளும் மாறி மாறி பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
பிரமாண பத்திரம் தாக்கல்
இந்நிலையில் இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக டெல்லி தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் சசிகலா அணி சார்பில், தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தார். சசிகலா அணி சார்பில் 4வது முறையாக இன்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
சிவி சண்முகம் தாக்கல்
4 லாரிகளில் எடுத்து வரப்பட்ட 1,52,000 பிரமாணப் பத்திரங்களை சி.வி.சண்முகம் தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து டெல்லியில் இருந்தபடியே அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
95% நிர்வாகிகள் ஆதரவு
அப்போது தங்களுக்கு 95 சதவீத கட்சி நிர்வாகிகள், சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக அவர் கூறினார். இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம் என்றும் அவர் கூறினார்.
இரு அணிகளும் இணையும்
இரு அணிகளும் இணையும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் சிவி சண்முகம் கூறினார். இரட்டை இலையை பெறுவதற்காக பிரமாண பத்திரங்கள் மற்றும் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ஓபிஎஸ் இணையாவிட்டாலும்
என்ன காரணத்துக்காக ஓபிஎஸ் பேச்சுவார்த்தை குழுவை கலைத்தார் என தெரியவில்லை என்றும சென்னை திரும்பியதும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். மேலும் ஓபிஎஸ் இணையாவிட்டாலும் இரட்டை இலைச் சின்னத்தை தங்களால் மீட்டெடுக்க முடியும் என்றும் அமைச்சர் சிவி சண்முகம் நம்பிக்கை தெரிவித்தார்.