பக்ரீத்துக்கு பிறகு காஷ்மீரில் 25 பேர் படுகொலை.. ஷாக் பட்டியலை வெளியிட்டது லஷ்கர்-இ-தொய்பா
ஸ்ரீநகர்: இந்தியாவுக்கு ஆதரவாக இருக்கும் 25 பேரை கொலை செய்ய உள்ளதாக லஷ்கர்-இ-தொய்பா, பயங்கரவாத இயக்கம் எச்சரிக்கை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் ஐந்து பேர் காஷ்மீரில் ஆளும் மக்கள் ஜனநாயக கட்சி பிரமுகர்கள் என்பதால் பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது.
ஹிஜ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தின் தளபதி புர்கான் வானி 2 மாதங்கள் முன்பு இந்திய பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதையடுத்து, காஷ்மீரில் சில குழுக்கள் தொடர் வன்முறையில் ஈடுபட்டனர்.
பொதுமக்களில் ஒரு பிரிவினரையும், இந்த குழுக்கள் மூளை சலவை செய்து, அவர்களையும் வீதிக்கு இறக்கி போராட தூண்டின. இதையடுத்து பெல்லட் குண்டுகளை கொண்டு கலவரத்தை அடக்க முயன்று விமர்சனத்திற்கு உள்ளானது பாதுகாப்பு படை.
பெல்லட் குண்டு
பெல்லட் குண்டுகளால் சாமானிய மக்களுக்கும் சீர் செய்ய முடியாத உடல் பிரச்சினைகள் ஏற்படுவதாக வந்த புகார்களை தொடர்ந்து இப்போது பவா வகை புல்லட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. காஷ்மீரில் கலவரம் படிப்படியாக குறைந்து ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.
வார்னிங் வீடியோ
இந்த நேரத்தில் லஷ்கர்-இ-தொய்பா ஒரு ஷாக் வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், இந்தியாவுக்கு உதவும் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என 25 பேரை வெளியிட்டுள்ளது லஷ்கர். அதில் ஐந்து பேர் மக்கள் ஜனநாயக கட்சி பிரமுகர்கள்.
எச்சரிக்கை
இந்த 25 பேரும் கடவுளிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு லஷ்கர் தொய்பாவுக்கு உதவ வேண்டும், இந்தியாவுடன் நட்பாக இருக்க கூடாது என வீடியோவில் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
படுகொலை
இந்த எச்சரிக்கையையும் மீறி இந்தியாவுடன் நட்புறவை பாராட்டினால், பக்ரீத் பண்டிகைக்கு பிறகு 25 பேரும் படுகொலை செய்யப்படுவார்கள் என வீடியோ எச்சரிக்கிறது. இதையடுத்து 25 பேருக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.