அம்ருத்தாவை சிறையில் தள்ளாமல் விடமாட்டேன்... புகழேந்தி சூளுரை
ஜெயலலிதாவின் மகள் என கூறிக் கொள்ளும் பெங்களூர் அம்ருத்தா மீது நாங்கள் சட்டபடி நடவடிக்கை எடுப்போம் என்று தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்தார்.
பெங்களூர்: ஜெயலலிதாவின் மகள் எனக் கூறி கொள்ளும் பெங்களூர் அம்ருத்தாவை சிறையில் தள்ளாமல் விடமாட்டேன் என்று தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் மகள் என்று கூறிக் கொண்டு பெங்களூரைச் சேர்ந்த அம்ருத்தா என்பவர் ஜெயலலிதாவுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய அறிவுறுத்தினர்.
இதையடுத்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அம்ருத்தா வழக்கு தொடர்ந்தார். அப்போது நீதிபதி வைத்தியநாதன், ஜெயலலிதாவின் உடலை ஏன் தோண்டி எடுக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பினார். பின்னர் சோபன் பாபுவை தந்தை என்று கோராதது ஏன் என்றும் அவர் கேட்டிருந்தார்.
டிடிவி தினகரன் பின்னாள்
இதுகுறித்து பெங்களூரில் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், துணை முதல்வர் பதவிக்காக ஓபிஎஸ் பல்வேறு நாடகங்களை ஆடினார். ஆர்கே நகர் இடைத்தேர்தல் முடிவுக்கு பின்னர் அனைவரும் டிடிவி தினகரனின் பின்னாள் வருவர்.
ஆதாரம் இல்லை
உலகம் போற்றும் மாபெரும் தலைவியாக இருந்தவர் ஜெயலலிதா. உலகமே மெச்சும் அளவுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்தவர். அவர் மீது அம்ருத்தா என்பவர் வழக்கு போட்டிருக்கிறார். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன், இந்த அம்ருத்தாவின் தாய் என்னை வந்து சந்தித்தார். அப்போது அவர் ஜெயலலிதாவின் மூத்த சகோதரி என்றார்கள். அவரிடம் ஆதாரம் கேட்டோம். ஆனால் அவர் கொடுக்கவில்லை.
சிறைக்கு அனுப்பாமல்...
சதி வேலை பின்னப்படுகிறது. ஜெயலலிதாவுக்கு குழந்தை இருந்ததாக கூறப்படுவது மிகவும் வேதனையாக இருக்கிறது. டிடிவி தினகரனுடன் ஆலோசனை நடத்தி வழக்கு தொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளேன். அந்த பெண் அம்ருத்தாவை சிறைக்கு அனுப்பாமல் நான் விடமாட்டேன். சோபன் பாபு குறித்து நீதிபதி கேட்பதை பார்க்கும் போது மனதுக்கு வருத்தமாக உள்ளது. மறைந்த ஜெயலலிதாவின் புகழை கெடுக்கும் அளவுக்கு சென்றுவிட்டனர்.
சட்டபடி வழக்கு
ஜெயலலிதா மீது நீதிமன்றமே தவறு கூறினாலும் அதை நான் ஒப்புக் கொள்ள முடியாது. ஒழுங்கீனமாக நடக்க கூடாது என்பதை கற்றுக் கொடுத்தவர் ஜெயலலிதா. அவர் மீதான வழக்கை ஆதாரமில்லாத நிலையில் விசாரிக்கும் நீதிமன்றமாக இந்த நீதிமன்றம் உள்ளது. நாங்கள் நீதிமன்றத்துக்கு சென்று சட்டபடி இந்த வழக்கை சந்திப்போம் என்றார். அம்ருத்தாவை ஒருமையிலேயே பேசினார் புகழேந்தி.
எம்ஜிஆர் போல் தினகரன் வெற்றி
நாளைய தினம் வரலாற்றில் இடம் பெறும் நாள். திண்டுக்கல் இடைத்தேர்தலில் எப்படி எம்.ஜி.ஆர் வெற்று பெற்றாரோ , அதே போல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி பெறுவார் என்று கோவையிலும் அவர் பேட்டி அளித்தார்.