காங்கிரஸ் கட்சி உட்பட அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளுடனும் வேலை செய்வோம்: சீதாராம் யெச்சூரி
ஹைதராபாத்: காங்கிரஸ் கட்சி உட்பட அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளுடனும் வேலை செய்வோம் என்று இரண்டாவது முறையாக மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சீதாராம் யெச்சூரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22வது மாநில மாநாடு, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடந்தது. நேற்றும் நடந்த இறுதிநாள் கூட்டத்தில் கட்சியின் புதிய பொதுச்செயலாளைரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடந்தது.
இதில், திரிபுரா மாநில முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார், ஆட்சி மன்றக் குழு பிருந்தா காரத், செயலாளர் பி.பி.ராகவலு உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலனையில் இருந்தது. ஏற்கனவே பொதுச்செயலாளர் பதவி வகித்து வந்த சீதாராம் யெச்சூரியின் பெயரும் பட்டியலில் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில், மத்தியக்குழு உறுப்பினர்கள் 95 பேரும் ஆதரவளித்ததையடுத்து, சீதாராம் யெச்சூரி ஒருமனதாக கட்சியின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அப்போது அவர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், தோழர் ஹோசிமின் அனைத்துக் கம்யூனிஸ்ட்டுகளுக்கும், கட்சியின் ஒற்றுமையை "கண்ணின் மணியைப் போன்று காத்திட வேண்டும்," என்று கூறியிருக்கிறார். அதுதான் எங்களுடைய ஆயுதம். எனவே, ஒற்றுமை என்கிற ஆயுதத்தை நாங்கள் எப்போதும் பாதுகாக்கும்படி செயல்படுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் எடுத்துள்ள புதிய அரசியல் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு, காங்கிரஸ் கட்சி உட்பட அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளுடனும் வேலை செய்வோம். இப்போதைக்கு எங்கள் மனதை இதற்கு மேல் செலவிடவில்லை. காலம் வரும்போது நாங்கள் அதைச் செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மார்க்சிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் ஒரே பக்கத்தில் தான் இருக்கிறது என்று பாஜக தொடர்ந்து குற்றம்சாட்டி வருவது தொடர்பான கேள்விக்கு, கேரளத்தில் நாங்கள் காங்கிரஸ் கட்சியை எதிர்த்துக் கொண்டிருக்கிறோம். அதனைச் செய்வது தொடரும்.
2006இல் மத்தியில் ஐமுகூ அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்த சமயத்திலும் வங்கத்திலும் கேரளாவிலும் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் நாங்கள் வெற்றி பெற்றோம். எனவே குழப்பத்திற்கே இடமில்லை. கேரளாவிலும்கூட காங்கிரசை எதிர்த்துப் போராடும் அதே சமயத்தில், பாஜகவை எதிர்ப்பதிலும் ஒற்றுமையை ஒருமுகப்படுத்திட முயற்சிப்போம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.