வட இந்தியாவை மெல்ல நனைத்த ஜில் மழை... கடும் வெப்பம் அடியோடு குறைந்தது
டெல்லி: வட இந்தியாவில் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. நேற்று டெல்லியில் புழுதிப் புயல் வீசி மக்கள் கண்ணில் மண்ணை அள்ளிப் போட்ட நிலையில் இன்று மழை பெய்து மக்கள் மனங்களை நனைத்துள்ளது.
வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் கடும் வெப்பமும் குறைந்து குளுமை குடியேறியுள்ளது.
கிழக்கைப் பொறுத்தவரையில், ஒடிசாவில் கன மழை பெய்து வருகிறது. இதில் கஞ்சம் மாவட்டத்தில் மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழந்தனர். தெற்கு குஜராத்திலும் பருவ மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் கன மழை பெய்து அங்கு வெப்பத்தைக் குறைத்துள்ளது. அதேபோல ஆந்திராவிலும் மழை பெய்துள்ளது.
டெல்லியில் திடீரென மாறிய வானிலையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று புழுதிப் புயல் வீசிய நிலையில் இன்று மழை பெய்ததால் மக்கள் குஷியடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக நிலவி வந்த வெப்பமும் குறைந்து குளுமை குடியேறியுள்ளது.
முன்னதாக நேற்று வீசிய மிகக் கடுமையான புழுதிக் காற்றில் சிக்கி ஒரு போலீஸ்காரர் காயமடைந்தனர். மணிக்கு 84 கிலோமீட்டர் வேகத்தில் நேற்று காற்று வீசியது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப், ஹரியானாவிலும் பலத்த காற்று வீசியது. மழையும் பெய்தது.
சண்டிகர், குர்கான், பரீதாபாத், ரோதக், மகேந்தர்கர், அம்பாலா, பன்ச்குலா ஆகிய பகுதிகளை புழுதிக் காற்று தாக்கியது. இதேபோல மொஹாலி, ரோபர், அமிர்தசரஸ் ஆகிய நகரங்களிலும் புழுதிக் காற்று மக்களை டென்ஷனாக்கியது.
புழுதிப் புயலால் சண்டிகரில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. சில மணி நேரம் இதனால் நகரம் ஸ்தம்பித்தது.