திருமண அழைப்பிதழ் மூலம் மோடிக்கு ஆதரவு பிரச்சாரம்… நோட்டீஸ் அனுப்பியது தேர்தல் ஆணையம்
டேராடூன்: திருமண அழைப்பிதழ் மூலம் பாஜகவுக்கு ஆதரவு திரட்டிய நபருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த சம்பவம் உத்தரகாண்டில் நடைபெற்றுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உட்பட்டு பிரச்சாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
சில இடங்களில் இலவச பொருட்கள், பணம் அளிப்பது என தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய கட்சிகள் மீது தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே, தங்களது விருப்பமான கட்சித் தலைவருக்கு ஆதரவாக தொண்டர்கள் பல்வேறு கட்ட பிரச்சாரங்களை மேற்கொண்டனர்.
அந்த வகையில், திருமண அழைப்பிதழ்களில் மொய், பரிசுப் பொருட்கள் வேண்டாம் என்றும் குறிப்பிட்ட கட்சிகளுக்கு வாக்களிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.
தென்காசி தொகுதியில் கிருஷ்ணசாமி போட்டி... தனிச் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை
வித்தியாசமான முறையில் மேற்கொள்ளப்பட்ட இந்த பரப்புரை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகும் தொடர்வதை அடுத்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த வகையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் கோலார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் சந்திரா. இவர் அப்பகுதியில் கோசாலையை நடத்தி வருகிறார். தனது மகன் ஜீவனின் திருமணப் பத்திரிகையில் வழக்கம் போல் இல்லாமல் மோடிக்கு வாக்களிக்குமாறு அச்சிட்டு நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கொடுத்துள்ளார்.
இந்த பத்திரிக்கை குறித்து மாவட்ட தேர்தல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது புகாரை கவனத்தில் எடுத்த மாவட்ட தேர்தல் ஆணையர் ஜெகதீஷ் சந்திராவுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
அதில் பத்திரிகையில் வாக்கு கேட்டது குறித்து நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதன்படி நேரில் ஆஜரான ஜெகதீஷ் சந்திரா பத்திரிக்கை கொடுக்கப்பட்ட வாசகங்கள் குறித்து விளக்கம் அளித்தார். அதில்,தான் பெரிய அரசியல்வாதிகள் அல்ல என்றும் சாதாரண ஆட்கள் தான் என்றும் கூறினார்.
இந்த பத்திரிகையின் வாசகத்துக்கும், அரசியல் கட்சிகளுக்கும் தொடர்பில்லை என்று தெரிவித்தார். உத்தரகாண்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 நடைபெற உள்ள நிலையில் ஜீவாவின் திருமணம் ஏப்ரல் 22-ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.