பாஜகவுக்கு எதிரான வலிமையான ஆயுதம் ‘திராவிடம்’... தென்னகத்துடன் கை கோர்க்கும் மே. வங்கம்!
சென்னை/கொல்கத்தா: பாரதிய ஜனதாவின் இந்துத்துவா சித்தாந்தத்துக்கு நேர் எதிரான வலிமையான ஆயுதம் திராவிட சித்தாந்தம் என்கிற வரலாற்று உண்மையை மேற்கு வங்கம் இப்போதுதான் உணர்ந்திருக்கிறது. இதனால்தான் நாடாளுமன்றத்தில் நாங்கள் திராவிடர் பழங்குடிகள் என பிரகடனம் செய்தார் திரிணாமுல் எம்.பி. சேகர் ராய்.
திராவிடம் என்கிற சொல் தமிழ் மண்ணில் பல நூறு ஆண்டுகளாக இருந்து வருகிறது. தமிழர் மதங்களாக சமணம், பதவுத்தம், சைவம், வைணவம் ஆகியவை கோலோச்சி கொடிநாட்டிக் கொண்டிருந்தன. அப்போது வட இந்தியாவில் இருந்து வந்த வைதீக மதம் தமிழர் மதங்களை தமக்குள் செரிமானித்துக் கொண்டது.
இதில் சைவமும் வைணவமும் வைதீக மதத்தின் வேட்டைக்குப் பலியாகி இந்து மதமாக உருவெடுத்தது. சமணமும் பவுத்தமும் போராட்டங்களை முன்னெடுத்தன. அதற்கு அடையாளமாக முன்னிறுத்தப்பட்டதுதான் திராவிடம். மதம், அரசியல் என தமிழர் வரலாறு தோறும் ஆரிய எதிர்ப்பு முழக்கமாக திராவிடம் என்கிற சொற்றொடர் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது
கொளுத்தி போட்ட திருநாவுக்கரசர்.. மீண்டும் குழம்ப போகும் காங்கிரஸ்.. லாபம் திமுகவுக்கு!
திராவிடமும் தமிழகமும்
இதன் நீட்சியாகவே தந்தை பெரியார் திராவிடர் என்கிற முழக்கத்தை உயர்த்திப் பிடித்தார். அதனடிப்படையில் திராவிட அரசியல் கட்சிகள் உருவாகின. வடவர் குறிப்பாக ஆரியர் என்கிற கருத்தியலை தூக்கி பிடிப்போருக்கு எதிரானதுதான் திராவிடம். இதை நீண்டகாலமாக தமிழ்நாடு மட்டுமே பேசிவந்தது.
கர்நாடகா, கேரளா முழக்கங்கள்
அண்மைக் காலங்களில் கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் திராவிடம் என்கிற கொள்கையை உயர்த்தி பிடிக்கின்றன. தமிழ்நாட்டைப் போலவே இந்தி ஆதிக்கத்தை வீரியத்துடன் எதிர்க்கிறது கர்நாடகா. இதே பாணியில் மேற்கு வங்கமும் தமது பயணத்தை முன்னெடுத்து வருகிறது. ஒருகட்டத்தில் திராவிட மாநிலங்களின் கூட்டமைப்பு; தனி திராவிட நாடு கோரிக்கையை கூட கேரளா பேசியது.
மேற்கு வங்கத்தின் போர்க்குரல்
இந்தி திணிப்புக்கு எதிராக மேற்கு வங்கத்தின் குரல் தென்னகம் வரை கேட்கிறது.. ஜெய் ஸ்ரீராம் என்ற முழக்கத்துக்கு எதிராக ஜெய் காளி! ஜெய் பங்களா என்கிற மேற்கு வங்க மாநில் கலாசாரம் பதிலடியாக வைக்கப்படுகிறது. இந்த வரிசையில் இப்போது நாங்களும் திராவிடர்களே என பிரகடனப்படுத்தியிருக்கிறது மேற்கு வங்கம்.
நேர் எதிர் சித்தாந்தங்கள்
இந்தியாவைப் பொறுத்தவரையில் வலதுசாரி இந்துத்துவா அரசியலுக்கு நேர் எதிரான சித்தாந்தம் திராவிடம் மட்டும்தான். அந்த ஒற்றை கோட்பாடு மட்டும் இந்துத்துவா என்னும் தத்துவத்தின் உள்ளடக்கத்தை மிகச் சரியாக புரிந்து கொண்ட ஒன்றாக இருந்து வருகிறது. இதனைத்தான் அண்மைய லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தின.
சித்தாந்த சிந்தனையற்றதன் விளைவு
பாஜகவை நாங்களும் எதிர்க்கிறோம் என்கிற காங்கிரஸும் இடதுசாரிகளும் திரிணாமுல் காங்கிரஸிம் இந்த சித்தாந்த சிந்தனை இல்லாததால் காலப் போக்கில் இந்துத்துவாவாதிகளாகவே உருமாறி விடுகின்றன. இப்போதாவது மேற்கு வங்கமும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸும் திராவிட சித்தாந்தத்தின் தேவையை புரிந்து கொண்டிருக்கின்றன.
திராவிடம் எனும் பேராயுதம்
அதனால் நாங்கள் திராவிடர் பழங்குடியினராகிய பங்கா இனத்தின் வழித்தோன்றல்கள்; எங்கள் மாநிலத்துக்கு பங்களா என பெயர் வைக்க வேண்டும் என போர்க்குரல் எழுப்புகின்றனர். இந்த தேசம் முழுவதும் தமிழர்களின் மூத்த குடியான நாகர்கள் வாழ்ந்தார்கள்; அவர்கள் பேசியது தமிழ் மொழி என்பார் அண்ணல் அம்பேத்கர். அதை வழிமொழிந்து இந்துத்துவா சக்திகளுக்கு எதிரான வலிமையான பேராயுதமாக திராவிடத்தை கையில் எடுக்க வேண்டியது இந்தி பேசாத மாநிலங்களின் முன் உள்ள வரலாற்று கடமை.