மேற்கு வங்கம்: 5-ம் கட்ட தேர்தலுக்கான வாக்கு பதிவு நாளை நடைபெறுகிறது- உச்சகட்ட பாதுகாப்பு
கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் 5-ம் கட்ட வாக்குப் பதிவு நாளை நடைபெறுகிறது. இந்த வாக்குப் பதிவின் போது வன்முறைகள் நிகழாமல் தடுக்க உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேற்கு வங்க சட்டசபை தேர்தல் மட்டும் 8 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதற்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தொடக்கம் முதலே கடுமையாக எதிர்த்து வருகிறார்.
நீலகிரி, கோவை, சேலத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
மேற்கு வங்கத்தில் எப்படியும் ஆட்சியை தக்க வைக்க மமதா பானர்ஜி போராடுகிறார். ஆனால் ஆட்சியை கைப்பற்றியே தீருவது என்பதில் பாஜக தீவிரமாக இருக்கிறது. இதற்காக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் மேற்கு வங்கத்தில் இடைவிடாமல் பிரசாரம் செய்கின்றனர்.
துப்பாக்கிச் சூடு- 4 பேர் பலி
இம்மாநிலத்தில் கடந்த 10-ந் தேதி நடைபெற்ற 4-ம் கட்ட வாக்குப் பதிவின் போது மத்தியப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கூச்பிகார் மாவட்டத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. வாக்களிக்க வந்த இளைஞர் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து மோதல் வெடித்ததால் மத்திய படையினரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
மமதாவுக்கு தடை- தர்ணா
இதன்பின்னர் மமதா பானர்ஜியின் கடுமையான விமர்சனங்களுக்கு தண்டனையாக 24 மணிநேரம் தேர்தல் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்தது பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்த தடையை கண்டித்து மமதா பானர்ஜி தர்ணா போராட்டம் நடத்தியிருந்தார். இந்த பரபரப்பான நிலையில் நாளை 5-ம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
நாளை 5-ம் கட்ட வாக்குப் பதிவு
5-ம் கட்ட தேர்தலானது 45 சட்டசபை தொகுதிகளில் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 39 பெண்கள் உட்பட 319 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வடக்கு மேற்கு வங்கத்தின் கலிம்போங். டார்ஜிலிங், ஜல்பைகுரி மாவட்டங்களில் மொத்தம் 13 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. கொரோனா கால கட்டுப்பாடுகளுடன் வாக்குப் பதிவுக்கு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளன.
கொரோனா கட்டுப்பாடுகள்
டார்ஜிலிங் மாவட்டத்தில் மட்டும் 5 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு மொத்தம் 1,719 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச் சாவடிக்கு வரும் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கூடுதல் கம்பெனிகள் குவிப்பு
இதனிடையே மேற்கு வங்கத்தில் கூடுதலாக 853 கம்பெனிகள் மத்திய படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 24 பர்கானாஸ் மாவட்டத்தில் மட்டுமே 283 கம்பெனிகள் மத்திய படைகள் வன்முறையை தடுக்க குவிக்கப்பட்டுள்ளன.
மாநிலங்களில் இடைத்தேர்தல்கள்
இதேபோல் ஆந்திராவின் திருப்பதி, கர்நாடகாவின் பெல்காம் லோக்சபா தொகுதிகளுக்கு நாளை இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மேலும் 10 மாநிலங்களில் 13 சட்டசபை தொகுதிகளுக்கும் நாளை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.