மே.வங்க சட்டசபை தேர்தல்: சி.ஏ.ஏ, என்.ஆர்.சி. விவகாரத்தில் ரொம்பவே பம்முது பாஜக
கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் சி.ஏ.ஏ, என்.ஆர்.சி. விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சி(பாஜக) மிகவும் பம்மி வருகிறது.
மேற்கு வங்க மாநிலத்துக்கு சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 2019 லோக்சபா தேர்தலில் சிபிஎம், காங்கிரஸ் கட்சிகளின் வாக்குகளையும் சேர்த்து அறுவடை செய்த பாஜக அமோக இடங்களில் வென்று வாக்கு சதவீதத்தை உயர்த்திக் கொண்டது.
மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 42 லோக்சபா தொகுதிகளில் 18-ல் பாஜக வென்றது; மொத்தம் 41% வாக்குகளை பாஜக பெற்றது. ஆனால் கடந்த 2019-ல் நடைபெற்ற 3 இடைத்தேர்தல்களில் மமதா பானர்ஜியின் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ்தான் வென்றது. லோக்சபா தேர்தலில் பாஜக 45,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற தொகுதிகளை உள்ளடக்கிய இடைத்தேர்தல்களிலும் கூட திரிணாமுல் காங்கிரஸ்தான் வாகை சூடியது.
சி.ஏ.ஏ.வும் மமதா-பாஜக
மத்தியில் ஆளும் பாஜகவைப் பொறுத்தவரையில் சி.ஏ.ஏ.வை எப்படியாவது அமல்படுத்துவோம் என்பதில் படுதீவிரமாக இருந்து வருகிறது. இன்னொரு பக்கம் மமதா பானர்ஜியோ, என் உயிர் போகும்வரை சி.ஏ.ஏ, என்.ஆர்.சியை எதிர்த்தே தீருவேன் என்றார். அத்துடன் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக மேற்கு வங்கத்தில் மட்டுமல்ல இந்திய அளவிலும் மிக கடுமையாக எதிர்க்கக் கூடிய தலைவராகவும் மமதா பங்கு வகித்தார்.
மதுவா சமூகம்
இதனால் மேற்கு வங்கத்தில் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான இஸ்லாமியர் வாக்குகள் அப்படியே மொத்தமாக மமதாவுக்கு போய்விடும் சூழ்நிலை இருந்து வருகிறது. அதேநேரத்தில் கணிசமான வாக்கு வங்கியை கொண்ட மதுவா என்கிற பட்டியல் சமூகத்தினர் சி.ஏ.ஏ. என்.ஆர்.சி அவசியம் என்கின்றனர். இவர்கள் வங்கதேசத்தில் இருந்து குடியேறிய இந்துக்கள். லோக்சபா தேர்தலின் போது மதுவா சமூகப் பெண் ஒருவரின் காலில் விழுந்து பிரதமர் மோடி ஆசி பெற்றிருந்தார்.
அபாய மணி
மதுவா சமூகம் உள்ளிட்ட இந்துக்களின் வாக்குகளை ஒருங்கிணைப்பதை பாஜக இலக்காக கொண்டிருந்தது. அதேநேரத்தில் மமதா பானர்ஜியோ, மதுவா சமூகத்தினர் மேற்கு வங்க மண்ணில் எந்த ஒரு சான்றிதழுமே இல்லாமல் இந்திய குடிமக்களாகவே வாழலாம் எனவும் சமாதானப்படுத்தி வந்தார். இந்த நிலையில் சி.ஏ.ஏ மற்றும் மதுவா சமூகத்தினர் விவகாரம் மேற்கு வங்கத்தில் கடுமையான இடியாப்ப சிக்கலை கொடுக்கும் என்பதை பாஜக தெளிவாகவே உணர்ந்து கொண்டிருக்கிறது.
பின்வாங்கும் அமித்ஷா
இதனால் சி.ஏ.ஏ. விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இப்போது பின்வாங்க தொடங்கிவிட்டார். சி.ஏ.ஏ.வுக்கான விதிமுறைகள் இன்னமும் வரையறுக்கப்படவில்லை; முதலில் கொரோனா வைரஸ் தொற்றை ஒழித்து கட்டிவிட்டு பின்னர் சி.ஏ.ஏ.வை பார்ப்போம் என்கிற அளவுக்கு ஜகா வாங்கி வருகிறார். மேற்கு வங்க சட்டசபை தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு சி.ஏ.ஏ. எனும் பெருநெருப்பில் கை வைத்து சுட்டுக் கொள்ள பாஜக தயாராகவே இல்லை என்பதையே இதுகாட்டுகிறது.
போர்க்குரல் எழுப்பும் மதுவா
ஆனால் மதுவா சமூகத்தினரோ சி.ஏ.ஏ.வை அமல்படுத்தியாக வேண்டும் என்பதில் பிடிவாதமாக உள்ளனர். சி.ஏ.ஏ. விவகாரத்தில் பம்முகிற பாஜக இப்போது மதுவா சமூகத்தினரையும் சமாதானப்படுத்துகிற முயற்சிகளில் மும்முரம் காட்டுகிறது. அண்மையில் மதுவா சமூகத்தலைவர்களை பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா சந்தித்து பேசி வாக்குறுதியும் அளித்திருந்தார். இன்னொரு பக்கம் இம்முறை இடதுசாரிகளும் காங்கிரஸ் கட்சியும் கை கோர்த்துக் கொண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்கின்றன.
பாஜக வியூகம் வெல்லுமா?
கேரளாவில் 600க்கும் அதிகமான சிறுபான்மையினரை தேர்தல் களத்தில் நிறுத்திப் பார்த்தும் பாஜகவின் இந்துத்துவா முகத்தை மக்கள் மறக்க தயாரில்லை என்பதை தோல்வி பாடம் மூலம் கற்றுத் தந்தனர். இப்போது மேற்கு வங்கத்திலும் சி.ஏ.ஏ.வில் காட்டிய தீவிரத்தைக் குறைத்து கொண்டு பாஜக ஆட்டத்தை ஆடத் தொடங்கியிருக்கிறது. மேற்கு வங்க மக்கள் என்ன பதில் தருவார்கள் என்பதை சட்டசபை தேர்தல் முடிவுகள் சொல்லத்தான் போகின்றன.