மே.வங்கம்: பாஜக வேட்பாளரான மாஜி ஐபிஎஸ் பெண் அதிகாரி மீது சரமாரி தாக்குதல்- கோவிலில் தஞ்சம்!
கடால்: மேற்கு வங்கத்தில் கடால் தொகுதி பாஜக வேட்பாளராக போட்டியிட்ட மாஜி ஐ.பி.எஸ். பெண் அதிகாரி பாரதி கோஷ் மீது திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் தாக்குதல் நடத்தி கீழே தள்ளிவிட்டதால் அவர் வாக்குச் சாவடி முன்பு கதறி அழுதார். பின்னர் பாதுகாப்புக்காக கோவில் ஒன்றில் தஞ்சம் அடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லோக்சபா தேர்தலுக்கான 6-வது கட்ட வாக்குப் பதிவு 7 மாநிலங்களில் 59 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகளில் 6-ம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.
இதில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் நம்பிக்கைக்குரிய ஐ.பி.எஸ். அதிகாரிகளில் ஒருவராக இருந்து பின் பாஜகவுக்கு தாவிய பாரதி கோஷ், கடால் தொகுதியில் போட்டியிடுகிறார். இத்தொகுதியின் கேஷ்பூர் வாக்குச் சாவடி இன்று போர்க்களமாக காட்சி தந்தது.
டெல்லியில் ஈவிஎம் இயந்திரங்கள் கோளாறு.. ஆம் ஆத்மி, காங். குற்றச்சாட்டு
பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் பெண் தொண்டர்களிடையே பெரும் மோதல் வெடித்தது. அப்போது பாரதி கோஷ் தாக்கப்பட்டு கீழே தள்ளிவிடப்பட்டார். இதனால் சம்பவ இடத்தில் பாரதி கோஷ் கதறி அழுதார். முன்னதாக பாரதி கோஷின் கார் மீது திரிணாமுல் தொண்டர்கள் சரமாரியாக கற்கள் வீசித் தாக்கினர்.
இதையடுத்து பாதுகாப்புக்காக அருகே உள்ள கோவில் ஒன்றில் தஞ்சம் அடைந்தார் பாரதி கோஷ். பிறகு வேறு வழியில்லாமல் காவல்நிலையத்துக்குள் புகுந்து தஞ்சம் கோரினார் பரதி கோஷ். இச்சம்பவம் மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.