மக்கள் நடமாடும் மார்க்கெட்.. தூக்கில் தொங்கிய மே.வங்க பாஜக எம்எல்ஏ! தற்கொலை கடிதத்தில் 2 பெயர்கள்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாஜக எம்.எல்.ஏ ஒருவர் மார்க்கெட் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கம் மாநிலம், வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை ஒரு கடைக்கு வெளியே திறந்த வராண்டா பகுதியில் எம்.எல்.ஏ தேபேந்திர நாத் ரே தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.
எம்எல்ஏ ஒருவர் இப்படி சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அந்த மாநிலத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
திமுக பக்கம் சாய்கிறதா பாஜக.. வாஜ்பாய் இருக்கும்போது நடந்தது.. மீண்டும் நடக்குமா
சந்தையில் தூக்கு
இதனிடையே தங்கள் எம்எல்ஏ கொல்லப்பட்டுள்ளார் என்று பாஜக குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளது. எம்.எல்.ஏ தேபேந்திர நாத் ரே தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட சந்தை பகுதி, அவரது வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு அவர் ஏன், எப்படி சென்றார் என்பது பற்றி காவல்துறைக்கு சில தகவல்கள் கிடைத்துள்ளன.
அதிகாலை வெளியே சென்றார்
இன்று, அதிகாலை 1 மணியளவில் சிலர் வீட்டிற்கு வந்து எம்எல்ஏவை அழைத்ததாகவும், எனவே அவர் கிளம்பிச் சென்றார் என்றும் அவர் குடும்பத்தார் கூறியுள்ளனர். இதன்பிறகு தேபேந்திர நாத்திடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. இந்த நிலையில்தான் சந்தை பகுதியில், அவர் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
போலீசுக்கு கிடைத்த தகவல்
"இன்று (திங்கட்கிழமை) காலை ஹெம்தாபாத் பகுதியில் உள்ள ஒரு கடைக்கு அருகில் தேபேந்திர நாத் ரே தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். பொதுமக்கள் சிலர் பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். நாங்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளோம்" என்று செய்தி ஏஜென்சி பி.டி.ஐ ஒரு மூத்த மாவட்ட காவல்துறை அதிகாரியை மேற்கோளிட்டு தெரிவித்துள்ளது.
பாஜக குற்றச்சாட்டு
அதேநேரம், எம்.எல்.ஏ கொலை செய்யப்பட்டதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. பாஜக தலைவர் கைலாஷ் விஜயவர்ஜியா ஒரு ட்வீட்டில், "மேற்கு வங்காளத்தில் பாஜக தலைவர்கள் கொல்லப்படுவதற்கு முடிவே இல்லை. திரிணாமுல் காங்கிரசை விட்டு வெளியேறியவர்கள் கொல்லப்படுகிறார்கள். குண்டர் ராஜ்ஜியம் மேற்கு வங்கத்தில் நடக்கிறது" என்று கூறியுள்ளார்.
பாஜக சென்றவர்
தேபேந்திர நாத் ரே, தினாஜ்பூர் மாவட்டத்திலுள்ள, ஹெம்தாபாத் சட்டசபை தொகுதியில் (பட்டியல் பிரிவினருக்கானது) 2016 ல் காங்கிரஸின் ஆதரவுடன் சிபிஎம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார், ஆனால் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு கடந்த ஆண்டு பாஜகவுக்கு மாறினார். இதனிடையே, இந்த சம்பவத்திற்கு பாஜக தலைவர் ஜேபி நட்டாவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தற்கொலை கடிதம்
பாஜக எம்எம்எல்ஏ பாக்கெட்டிலிருந்து, ஒரு தற்கொலை கடிதம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில், 2 பேரின் பெயரை தற்கொலைக்கான காரணமாக அவர் எழுதி வைத்துள்ளார். ஆனால், அவர்கள் யார் என்ற தகவலை காவல்துறை வெளியிடவில்லை. ஒரு பக்கம் பாஜக இது கொலை என கூறும் நிலையில், மறுபக்கம் அந்த எம்எல்ஏ தற்கொலை கடிதம் எழுதியுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது, குறிப்பிடத்தக்கது.