பாஜக பிரமாண்ட பேரணி.. போலீஸ் மீது வெடிகுண்டு வீச்சு.. கலவர பூமியான கொல்கத்தா
கொல்கத்தா: கொல்கத்தா மற்றும் அதனை ஒட்டிய ஹவுரா மாவட்டத்தில் காவல்துறையினர் மீது பாஜக தொண்டர்கள் வெடிகுண்டுகள் மற்றும் செங்கற்களை வீசியதால், போலீசார் தடியடி நடத்தினர்.
ஆளும் திரிணாமுல் காங்கிரசாரால், பாஜக தொண்டர்கள் கொல்லப்படுவதாக அக்கட்சியின் நிர்வாகிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.
இதையடுத்து, மாநில அரசைக் கண்டித்து பாஜக சார்பில் ஹவுராவில் உள்ள தலைமைச் செயலகம் நோக்கி ஆர்ப்பாட்ட பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று பாஜகவினர் கொல்கத்தா மற்றும் ஹவுராவில் இருந்து பேரணியாக புறப்பட்டனர்.
இதனால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு பேரணிக்கு திட்டமிடப்பட்ட சாலைகள், தெருக்கள் அடைக்கப்பட்டன. தடை செய்யப்பட்ட பகுதிகளில் போலீசார் தடுப்புகளை அமைத்திருந்தனர். ஆனால் தடையை மீறி பேரணி நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஹவுராவில் போலீசாரின் தடுப்பை மீறி பாஜகவினர் முன்னேறி செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியபோது, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது போலீஸ் மீது குண்டுகளையும், செங்கற்களையும் பாஜகவினர் வீசியதாக கூறப்படுகிறது. ஒரு பாஜக நிர்வாகியிடமிருந்து பிஸ்டல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எனவே, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி நிலைமை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
West Bengal: Heavy police deployment outside BJP state headquarters in Kolkata. BJP workers have gathered in large numbers for the 'Nabanna Chalo' agitation & are raising slogans against the state government. pic.twitter.com/fdDfhVFsn0
— ANI (@ANI) October 8, 2020
இதேபோல் கொல்கத்தாவின் ஹாஸ்டிங்ஸ் பகுதியில் நடந்த பேரணியின்போது பாஜகவினர் மீது போலீசார் தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் கூட்டத்தை கலைத்தனர். போலீசாரைக் கண்டித்து பாஜகவினர் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்த மோதலில் மாநில துணைத் தலைவர் ராஜு பானர்ஜி உட்பட பல பாஜக தொண்டர்கள் காயமடைந்தனர்.