பிரதமர் பதவி போட்டி ஏற்படாமல் மெகா கூட்டணி அமைப்பது எப்படி? மமதா பானர்ஜி புது ஐடியா
எங்களுடைய முதல் இலக்கு பாஜகவை தோற்கடிப்பது என்றும் பிறகு பிரதமரை தேர்ந்தெடுக்கலாம் என்றும் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
Recommended Video
டெல்லி: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தியை சந்தித்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்களுடைய முதல் இலக்கு பாஜகவைத் தோற்கடிப்பதுதான் என்றும் தேர்தலுக்குப் பிறகு பிரதமரை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.
பாஜகவுக்கு எதிரான அரசியல் கட்சிகளின் கூட்டணியை உருவாக்கிவரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தியை ஜன்பத் இல்லத்தில் சந்தித்தார். அப்போது, வருகிற 2019 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதி மேற்கு வங்கத்தில் நடைபெற உள்ள பேரணியில் பங்கேற்பதற்கு சோனியாகாந்திக்கும் ராகுல் காந்திக்கும் அழைத்தார்.
இந்த சந்திப்பின்போது மம்தா பானர்ஜி சோனியா காந்தியிடம், எதிர்க்கட்சிகள் கூட்டணியை உருவாக்குவது பற்றி விவாதித்துள்ளார். அதில், எதிர்க்கட்சிகள் மாநிலங்களிலிருந்து எதிர்த்து போராடுவதில் உறுதியாக இருக்கவேண்டும். தேர்தலுக்குப் பிறகு பிரதமரை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜியிடம் மூன்றாவது அணி அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்ட நிலையில், எப்படி ஒன்றினைந்து எதிர்க்க முடியும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மம்தா பானர்ஜி, "தற்போது பாஜக அரசியலில் பதற்றமாக இருக்கிறது. அவர்கள் 2019 தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வரமாட்டார்கள் என்பது அவர்களுக்கு தெரியும். எங்களுடைய முதல் இலக்கு பாஜகவைத் தோற்கடிப்பதுதான்" என்று கூறினார்.
மேலும், இந்த சந்திப்பின்போது மம்தா பானர்ஜி, சோனியா காந்தி, ராகுல் காந்தி தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து விவாதித்துள்ளனர். தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்தில், தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்டவர்கள் அந்நியர்கள் இல்லை. பலரின் பெயர் சேர்க்கப்படவில்லை என்று மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.
முன்னதாக தேசிய குடிமக்கள் பதிவேடு கருத்து தெரிவித்த மம்தா பானர்ஜி, 40 லட்சம் மக்கள் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் சேர்க்காமல் விட்டுள்ளார்கள். இது உள்நாட்டுப் போருக்கும் ரத்தக் களறிக்கும் வழிவகுக்கும் என்று கூறினார். இதைத்தொடர்ந்து, மம்தா பானர்ஜியின் பேச்சு அஸாமில் பிரிவினையை உண்டாகி மக்களிடையே விரோதங்களை ஏற்படுத்துவதாக உள்ளது என்று புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் அஸாம் போலீஸார் மம்தா பானர்ஜியின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக விளக்கமளித்த மம்தா பானர்ஜி, இந்த நாட்டிலிருந்து 40 லட்சம் மக்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள். பாஜக என்ன விரும்புகிறது உள்நாட்டுபோரையா? அல்லது அமைதியையா? நமக்கு உள்நாட்டுப்போர் தேவையில்லை. நமக்கு நாட்டில் அமைதிதான் வேண்டும்" என்று கூறினார்.