மோடியின் மனைவிக்கு சேலையை பரிசளித்த மம்தா பானர்ஜி.. கொல்கத்தா ஏர்போர்ட்டில் பாசமழை!
கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென்னை கொல்கத்தா விமான நிலையத்தில் சந்தித்தார். அப்போது இருவரும் ஒருவருக்கு மகிழ்ச்சியோடு நலம் விசாரித்தனர். அப்போது அழகான சேலையை மம்தா பானர்ஜி யசோதாவுக்கு பரிசளித்தார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானார்ஜியும் பிரதமர் நரேந்திரமோடியும் அரசியல் அரங்கில் பரம வைரியாக காணப்படுகின்றனர். மேற்கு வங்க லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தில் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்தனர்.
நாட்டில் மம்தா பானர்ஜி போல் எந்த முதல்வரும் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தது கிடையாது. இதேபோல பிரதமர் மோடியும் எல்லா மாநிலங்களையும் விட மேற்கு வங்கத்தில் கட்சியை வளர்க்க பல அதிரடியான வியூகங்களை செய்து வருகிறார். இதனால் மோடி மற்றும் மம்தா இடையே அரசியல் ரீதியாக சுமூகமான நிலை இல்லை.
இந்நிலையில் பிரதமர் மோடியின் மனைவி யசோதா பென் கடந்த திங்கள்கிழமை கொல்கத்தா வந்தார். அங்கிருந்து ஜர்கண்ட் மாநிலம் தன்பாத் அருகே உள்ள அசன்சாலில் உள்ள கல்யானேஸ்வரி கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். இதன்பின்னர் மீண்டும் கொல்கத்தா விமான நிலையம் வந்தார்.
இதற்கிடையே முதல்வர் மம்தா பானர்ஜி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடிய சந்திப்பதற்காக இரண்டு நாள் பயணமாக இன்று சென்றார். இதற்காக கொல்கத்தா விமான நிலையம் வந்த மம்தா பானர்ஜி செல்லும் வழியில் மோடியின் மனைவி யசோதா பென்னை சந்தித்தார். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்னர். அத்துடன் நல்லாயிருக்கீங்களா.. என்று சொலலி நலம் விசாரித்து அன்பை பரிமாறிக்கொண்டனர். அப்போது முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடியின் மனைவிக்கு புடவை ஒன்றை பரிசளித்தார். அதை பெற்றுக் கொண்ட யசோதாபென் சிறிது நேரம் பேசினார். அதன்பிறகு அவரவர் விமானத்தில் ஏறி இருவரும் புறப்பட்டு சென்றனர்.