பாஜக மூத்த தலைவர் ராகேஷ் சிங் சதி- போதை பொருளுடன் பிடிபட்ட பாஜக இளைஞரணி பொதுச்செயலாளர் பமீலா பகீர்
கொல்கத்தா: பாஜக மூத்த தலைவர் ராகேஷ் சிங் சதி செய்து தம்மை சிக்க வைத்துவிட்டதாக போதை பொருளுடன் பிடிபட்ட மேற்கு வங்க பாஜக இளைஞரணி பொதுச்செயலாளர் பமீலா கோஸ்வாமி பகீர் புகார் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க சட்டசபை தேர்தல் பிரசாரம் அனல் பறக்கிறது. இந்த நிலையில் பாஜகவின் பமீலா கோஸ்வாமி 100 கிராம் கோகைன் போதைப் பொருளுடன் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த கொல்கத்தா போலீசார், பமீலா கோஸ்வாமி தொடர்ந்து போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் அவர் சோதனைக்குள்ளாக்கப்பட்டார். அவரது பையில் இருந்து கோகைன் போதைப் பொருள் பிடிபட்டது என்றனர்.
பமீலா கைது செய்யப்பட்டு நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது நீதிமன்றத்தில், மேற்கு வங்க பாஜக தலைவர் கைலாஷ் விஜய்வர்கியாவுக்கு மிக நெருக்கமான ராகேஷ் சிங் என்பவர்தான் சதி செய்து என்னை போதைப் பொருள் வழக்கில் மாட்டிவிட்டதாக பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும் ராகேஷ் சிங் சதி செய்ததற்கான ஆடியோ ஆதாரம் தம்மிடம் இருக்கிறது என்றும் பமீலா கூறினார்.
இதனால் மேற்கு வங்க அரசியல் மேலும் பரபரத்துள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை விஜய் வர்கியா, ராகேஷ் சிங் ஆகியோர் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.