மேற்கு வங்க காங்கிரஸ் தலைவரும் ராஜினாமா... தொடர் விலகலால் காங். கட்சிக்கு நெருக்கடி
கொல்கத்தா: காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பேற்று அக்கட்சியின் தலைவர் ராகுல் ராஜினாமா செய்ததை அடுத்து காங்கிரசின் முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவராக கட்சிப் பொறுப்பில் இருந்து விலகி வருகின்றனர். அந்த வகையில், மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா இப்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடும் வீழ்ச்சியை சந்தித்தது. 52 இடங்களில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றது. இதனையடுத்து காங்கிரசின் தலைவர் ராகுல் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரையடுத்து பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் காரியக் கமிட்டிகள் கலைக்கப்பட்டன.
கடந்த 7 -ம் தேதி மும்பை காங்கிரஸ் தலைவர் மிலிந்த் தியோரா தனது பதவியை ராஜினாமா செய்தார். இவரைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர்களில் முக்கியமானவரான ஜோதிராதித்ய சிந்தியா தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்காளத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் 2 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று தான் ராஜினாமா செய்வதாக சோமன் மித்ரா தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகள் வெளிவந்ததுமே இவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆனால் மேற்கு வங்க மாநிலத் தலைவர்கள் இதற்கு உடன்படவில்லை. இதனால் சோமன் மித்ரா அமைதியாக இருந்தார்.
இப்போது ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதால் சோமனும் தனது பதவியை ராஜினாமா செய்து ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் மேலிடத்திற்கு அனுப்பியுள்ளார். ஆனால் காங்கிரஸ் மேலிடமும் அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளவில்லை. சோமன் மித்ரா ராஜினாமா கடிதத்தை அனுப்பியதும் மேற்கு வங்க காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் கவுரவ் கோகாய், சோமனை சந்தித்து பேசினார்.
அவரை சமாதானப் படுத்திய கவுரவ் கோகாய் சோமனிடம் புதிய தேசியத் தலைவர் தேர்வு செய்து அதன் பின்னர் மாநிலக் கமிட்டிகளை மாற்றி அமைக்கும்போது மாநிலத் தலைவர்களின் ராஜினாமா, மற்றும் அவர்களின் மாற்றம் குறித்து முடிவு எடுக்கப்படும் அதுவரை தாங்கள் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று சோமனிடம் மேற்கு வங்க மேலிடப் பார்வையாளரான கவுரவ் கோகாய் கூறியுள்ளார்.