4 சீட்டு தாரோம் வந்துடுங்க.. தூது விடும் மார்க்சிஸ்ட்.. திமிறும் காங்கிரஸ்.. அடுத்து என்ன?
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 38 லோக்சபா தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது. எஞ்சிய 4 தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியுள்ளது.
மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி தலைமையிலான, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், காங்கிரஸ், பாஜக கட்சிகள் முழு வீச்சில் லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள உள்ளன.
இதனிடையே மொத்தமுள்ள 42 தொகுதிகளில் முதல்கட்டமாக மார்க்சிஸ்ட் 25 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்தது.
உ.பி. தேர்தலில் காங். தனித்து நின்றால்... பாஜகவுக்கு 14 சீட்டு லாபம்... பிரணாய் ராய் கணிப்பு
|
ஆஃபர் கொடுக்கும் மார்க்சிஸ்ட்
நேற்று மேலும் 13 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்துள்ளது. ஆக மொத்தம் 38 தொகுதிகளில் மார்க்சிஸ்டும், எஞ்சிய 4 தொகுதிகளை காங்கிரசுக்கு விட்டுக் கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலின்போது, காங்கிரஸ் வெற்றி பெற்று இப்போது சிட்டிங் எம்பிக்களை கொண்டவை அந்த 4 தொகுதிகளாகும். எனவே அவற்றிற்கு மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் பெயர்களை அறிவிக்கவில்லை. மார்க்சிஸ்டுடன், காங்கிரஸ் கட்சி இன்னும், கூட்டணி அமைக்கவில்லை. இருப்பினும் இந்த ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது.
மாலை வரை கெடு
இதுபற்றி மார்க்சிஸ்ட் தலைவர் பிமான் போஸ் கூறுகையில், காங்கிரசின் சிட்டிங் எம்பிக்கள் உள்ள 4 தொகுதிகளுக்கும் நாங்கள் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. வரும் புதன்கிழமை மாலை வரை, காங்கிரசின் பதிலை எதிர்பார்ப்போம். நேர்மறை பதில் கிடைத்தால் ஓகே. அல்லது, 4 தொகுதிகளுக்கும் நாங்கள் வேட்பாளர்களை அறிவிப்போம் என்றார். மேலும் போஸ் கூறுகையில், பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக விழும் வாக்குகளை, காங்கிரஸ் கவனத்தில் கொள்ள வேண்டும். பல தொகுதிகளில் காங்கிரசின் வாக்கு வங்கி என்பது 1.5 சதவீதம் முதல் 2 சதவீதம் வரையில் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் பிடிவாதம்
அதேநேரம், மேற்கு வங்க காங்கிரஸ் கட்சி ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிரதிப் பட்டச்சார்யா கூறுகையில், இதுபோன்ற நெருக்கடிகளுக்கு காங்கிரஸ் பணியாது. கூட்டணியை நிர்ணயிப்பதில் எங்களுக்கு சில நடைமுறைகள் உள்ளன. அவற்றை பின்பற்றியே முடிவெடுப்போம். எனவே காத்திருந்து பார்க்கவும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கூட்டணி பேச்சுவார்த்தை
கடந்த திங்கள்கிழமை காங்கிரஸ் கட்சி மொத்தம் 11 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது. அதில், மார்க்சிஸ்ட் வெற்றி பெற்ற ராய்கஞ்ச் மற்றும் முர்ஷிதாபாத் ஆகிய தொகுதிகளும் அடங்கும். ஏற்கனவே காங்கிரஸ், மார்க்சிஸ்ட் நடுவே நடைபெற்ற கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.