மேற்கு வங்கத்தில் ஆக.31 வரை.. வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே லாக்டவுன்.. முதல்வர் மம்தா அதிரடி
கொல்கத்தா: மேற்குவங்கத்தில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே இனி லாக்டவுன் கடைபிடிக்கப்படும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14லட்த்து 93 ஆயிரத்தை கடந்துவிட்டது. இன்று இரவுக்குள் 15லட்சத்தை தொட்டுவிடும் என தெரிகிறது. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த போடப்பட்ட ஊரடங்கு வரும் 31ம்தேதியுடன் நிறைவடைகிறது. மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என தெரிகிறது.
ஆனால் பல மாநிலங்கள் ஊரடங்கை ரத்து செய்ய விரும்புகின்றன. கர்நாடகா முதல்வர் எடியூரப்பா ஊரடங்கு இனி கிடையாது என்று அறிவித்துவிட்டார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கடந்த சில வாரம்முன்பு ஊரடங்கை நீடிக்க வாய்ப்பு இல்லை என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, வரும் ஆகஸ்ட் 31 வரை இனி வாரத்திற்கு 2 நாட்கள் மட்டுமே லாக்டவுன் கடைபிடிக்கப்படும் என்றும் மற்ற நாட்களில் ஊரடங்கு இல்லை என்றும் அறிவித்துள்ளார். பக்ரீத் பண்டிகையை ஒட்டி ஆகஸ்ட் 1ம் தேதி மேற்கு வங்கத்தில் ஊரடங்கு இல்லை என்றும் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் பீருக்கு வந்த சோதனை.. இப்படியெல்லாம் நடக்குமான்னு யோசிக்கக்கூட முடியாத மாற்றம்!
லாக்டவுன் நாட்களில் அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், பொது மற்றும் தனியார் போக்குவரத்து ஆகியவை மூடப்படும். அத்தியாவசிய சேவைகள் மட்டுமே செயல்படும். பெட்ரோல் பம்புகள் திறக்க அனுமதிக்கப்படும். நீதிமன்றங்களின் செயல்பாடு, வேளாண் துறைகள் மற்றும் தேயிலைத் தோட்டங்கள், உள்-மாநில மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பொருட்கள் இயக்கங்கள் மற்றும் உணவகங்களில் பார்சல் ஆகியவற்றுக்கு அனுமதிக்கப்படும் என்று மம்தா அறிவித்துள்ளார்.
முன்னதாக விமானங்களையும் ரயில்களையும் ரத்து செய்ய மேற்கு வங்க அரசு முடிவு செய்தது. இதன்படி டெல்லி, மும்பை, சென்னை, புனே, நாக்பூர் மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களிலிருந்து கொல்கத்தா செல்லும் அனைத்து பயணிகள் விமானங்களும் ஜூலை 31 வரை ரத்து செய்யப்பட்டது.