மேற்கு வங்க பலாத்கார குற்றவாளிகளை உடல் ரீதியாக தண்டிக்க வேண்டும் - எம்.கே.நாராயணன்
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் பிர்பம் மாவட்டத்தில் ஆதிவாசிப் பெண்ணை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்த நபர்களுக்கு உடல் ரீதியான கடுமையான தண்டனை தர வேண்டும் என்று மாநில ஆளுநர் எம்.கே.நாராயணன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இதுபோன்ற கட்டப் பஞ்சாயத்துக்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு ஒரே மாதிரியாக, சட்டப்படியானதாக மட்டுமே இருக்க வேண்டும். இதுபோன்ற ஊர்த் தீர்ப்புகள், ஊர்த் தலைவரின் உத்தரவுகள் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும்.
இதுபோன்ற செயல்களை இனியும் நடக்காமல் பார்க்க வேண்டும். அதுதான் முக்கியம். அறவே தடுக்க வேண்டும். இதுவரை நடந்த சம்பவங்களை நம்மால் தடுக்க முடியாமல் போய் விட்டது. இனியும் தொடராமல் இருக்கத் தேவையான நடவடிக்கைளை மேற்குவங்க அரசு தொடங்கியுள்ளதாக நான் நம்புகிறேன்.
நாம் அனைவருமே மனிதர்கள். மிருகங்கள் அல்ல. கட்சி சார்பற்று இதில் நாம் அனைவரும் நடக்க வேண்டும். தவறு செய்தவர்கள் இந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று பார்க்கக் கூடாது. அவர்களைத் தனி நபர்களாகவே பார்க்க வேண்டும். அவர்களுக்கு உடல் ரீதியான கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றார் நாராயணன்.