மேற்கு வங்கத்தில் நடப்பது என்ன? ராஜ்நாத் சிங்கிற்கு அறிக்கையை அனுப்பிய ஆளுநர்
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் திரிபாதி அறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரணை நடத்திவருகிறது. இந்த வழக்கு தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரை விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் சென்றது தற்போது பெரும் சர்ச்சையிலும், அரசியல் பரபரப்பிலும் கொண்டு சென்று விட்டுள்ளது.
சிபிஐ அதிகாரிகள் அனுமதியில்லாமல் வந்தததாக கூறி அவர்களை போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து வந்தனர்.அதை தொடர்ந்து, முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று இரவு முதல் கொல்கத்தா எஸ்பிளனேடு பகுதியில் தர்ணா போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
மாநிலத்தில் நிலவும் சூழல், சட்டம் ஒழுங்கு குறித்து அறிய ஆளுநர் கேசரி நாத் திரிபாதி, மாநில தலைமைச் செயலாளருக்கும், போலீஸ் டிஜிபிக்கும் சம்மன் அனுப்பி நிலைமையைக் கேட்டறிந்து உரிய நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், தற்போது மேற்கு வங்க மாநிலத்தில் நிலவும் அரசியல் சூழல், சட்டம் ஒழுங்கு குறித்து அம்மாநில ஆளுநர் கேசரிநாத் திரிபாதி மத்திய உள் துறை அமைச்சகத்துக்கு அறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநரை, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அழைத்து விவரம் கேட்டுள்ளார்.
அறிக்கை சமர்ப்பித்த நிலையில், மேற்கு வங்கத்தில் மத்திய அரசு நிறுவனங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. சிபிஐ அலுவலகங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அங்கு சிஆர்பிஎப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.