உங்களுக்கு பதில் சொல்லணும்னு அவசியமில்லை.... உள்துறை அமைச்சகத்துக்கு மம்தா அரசு பதிலடி!
கொல்கத்தா: ஜே.பி.நட்டா பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி மேற்கு வங்க அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பி இருந்தது.இந்த சம்மனுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என மேற்கு வங்க எம்பி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மேற்கு வங்கத்தில் அவசர நிலை கொண்டு வர முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். ஜே.பி.நட்டா மீதான தாக்குதல் முயற்சியின் மூலம் மேற்கு வங்கத்தில் குண்டர்கள் ஆட்சி நடக்கிறது என அமித்ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர் கண்டனம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
பாஜக தலைவர் ஜே.பி.நட்டா சில தினங்களுக்கு முன்பு மேற்கு வங்கம் சென்றபோது அவரது பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பாஜக பிரமுகர்கள் சிலர் காயம் அடைந்தனர். நல்லவேளையாக ஜே.பி.நட்டாவுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக மேற்கு வங்கத் தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோருக்கு உள்துறை அமைச்சகம் வரும் 14-ம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தது.
இந்த கடிதத்திற்கு பதில் அளித்து மேற்கு வங்க எம்.பி. கல்யாண் பானர்ஜி உள்துறை அமைச்சகத்துக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:-மத்திய அரசு கடுமையான நடவடிக்கையால் மாநில அரசு நிர்வாகத்தை மிரட்ட முயல்கிறது. தலைமைச் செயலாளர், டிஜிபிக்கு சம்மன் அனுப்பி உள்ளது இந்த செயலைத்தான் காட்டுகிறது. சட்டம்-ஒழுங்கு என்பது மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது.
வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கே அதிகாரம்... எங்களை நம்புங்க... விவசாயிகளை சமாதானப்படுத்தும் மோடி!
அரசியல் பழிவாங்கும் நோக்கில் மேற்கு வங்க அதிகாரிகளை நீங்கள் கொடுமைப்படுத்த முயல்கிறீர்கள். இது கூட்டாட்சிக் கட்டமைப்பில் தலையிடுவதாகும்.சட்டம்- ஒழுங்கைப் பொறுத்தவரை, மாநில அரசு சட்டப்பேரவைக்குப் பதில் சொல்லத்தான் கடமைப்பட்டுள்ளது. ஆனால், உங்களுக்கும், உங்கள் உள்துறை அமைச்சருக்கும் பதில் சொல்லக் கடமைப்படவில்லை.
அமித் ஷாவின் நடவடிக்கையால் , சட்டங்கள் ஆற்றில் வீசப்பட்டுள்ளன. மாநிலத்தில் அவசர நிலையைக் கொண்டுவர மறைமுகமான முயற்சிகள் நடக்கின்றன என்று கல்யாண் பானர்ஜி அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.