வேளாண் சட்டத்தை எதிர்த்து மே.வங்க சட்டசபையில் தீர்மானம்..'ஜெய்ஸ்ரீ ராம்' எனக்கூறி பா.ஜ.க வெளிநடப்பு!
கொல்கத்தா: மத்திய அரசின் வேளாண் சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்க சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கு எதிர்ப்பாகவும், நிறுவனங்களுக்கு சாதகமாகவும் உள்ளது என்று இந்த தீர்மானம் கூறுகிறது.
பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 'ஜெய் ஸ்ரீ ராம்' என கோஷமிட்டு சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
போராட்டம்
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு அவர்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் அது தோல்வியில்தான் முடிந்து வருகிறது.
மே.வங்க சட்டசபையில் தீர்மானம்
இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதுவரை, பாஜக ஆட்சியில் இல்லாத பஞ்சாப், சத்தீஸ்கர், ராஜஸ்தான், கேரளா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்கள் தங்களது சட்டசபையில் வேளாண் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. இந்த நிலையில் மேற்கு வங்க அரசும், சட்டசபையில் வேளாண் சட்டத்துக்கு எதிராக இன்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு
மேற்கு வங்க சட்டசபையில் மாநில நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி இன்று இந்த தீர்மானத்தை தாக்கல் செய்தார். அதன்பின்னர் ஆளும் கட்சி எம்.எல்.ஏக்கள் ஏகோபித்த ஆதரவுடன் மத்திய அரசின் வேளாண் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த வேளையில் சபையில் இருந்த பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் தங்களது சட்டமன்றக் கட்சித் தலைவர் மனோஜ் டிக்கா தலைமையில் சபையின் மைய பகுதிக்கு சென்று இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
'ஜெய் ஸ்ரீ ராம்' கோஷம்
தொடர்ந்து பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் சபையில் ''ஜெய் ஸ்ரீ ராம்' என்று கோஷமிட்டு சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மேற்கு வங்க சட்டசபையில் இன்று நிறைவேற்றிய தீர்மானம் மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கு எதிர்ப்பாகவும், நிறுவனங்களுக்கு சாதகமாகவும் உள்ளது என்று கூறுகிறது. வேளாண் விளைபொருட்களை வாங்குவதை நிறுத்த கட்டாயப்படுத்தப்படும் சூழ்நிலையை இந்த சட்டங்கள் உருவாக்கும் என்றும், இது பொது விநியோக முறை சரிவடைவதற்கும், பதுக்கல் மற்றும் கறுப்பு சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் முன்னேறுவதற்கும் வழிவகுக்கும் என்று அந்த தீர்மானம் கூறுகிறது.