பிரதமருக்கு இணையானது.. வேற லெவலுக்கு போகும் பிரசாந்த் கிஷோர்.. இசெட் பிளஸ் பாதுகாப்பு
கொல்கத்தா: பிரபல அரசியல் வியூக வல்லுனரான பிரசாந்த் கிஷோருக்கு பிரதமருக்கு இணையானதாக கருதப்படும், இசட் பிரிவு பாதுகாப்பை வழங்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளார்.
பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் பற்றி இந்திய அரசியலில் அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. 2014ல் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியை பிடித்தபோது, அவருடைய டீமில் இருந்ததால் முதல் முறையாக வெளிச்சத்திற்கு வந்தவர்.
ஐக்கிய ஜனதா தளம், ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகள் வெற்றி பெறுவதற்கு வியூகம் வகுத்து கொடுத்தவர் ஆவார். பஞ்சாபில் அம்ரீந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமையவும், உதவியாக இருந்தார்.
நீங்க வேறமாதிரி செயல்பட்டால் நானும் வேறு மாதிரிதான்'.. பஞ்சாயத்து தலைவர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை
கட்சியிலிருந்து நீக்கம்
இந்த நிலையில் பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்து வந்தார். ஆனால், குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பான நிதிஷ் குமார் முடிவால் கொந்தளித்து கட்சியிலிருந்து வெளியேறினார். கடந்த மாதம் அந்த கட்சியின் துணைத் தலைவர் பதவியில் இருந்தும் கட்சி உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்.
உரசல்
எனவே நிதிஷ்குமார் கட்சியினருக்கும், பிரசாந்த் கிஷோருக்கும் இடையே உரசல் அதிகரித்துள்ளது. பீகாரில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக, லாலு பிரசாத் யாதவ் கட்சிக்கு வியூக நபராக பிரசாந்த் கிஷோர் பணிக்கு சேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
திமுக
தற்போது அவர் மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரசுக்கும், தமிழகத்தில் திமுகவுக்கும், தேர்தல் வியூகங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
சமீபத்தில் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் டீமுக்காக பணியாற்றி அபார வெற்றி கிடைக்கச் செய்ததில் முக்கிய பங்காற்றியவரும் இவரே. எனவே தேசிய அளவில் எதிரிகளும் அதிகரித்துள்ளனர். பிரசாந்த் கிஷோருக்கு பல்வேறு கட்சியினர் மூலம் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.
இசெட் பிளஸ்
இந்த நிலையில்தான், அவரது பயணத்திட்டங்களில் அடிக்கடி மாற்றங்கள் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவருக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பை வழங்க மேற்கு வங்க முதல்வரான மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தின் உள்துறை அமைச்சகம் இது தொடர்பான ஆவணங்களை தயார் செய்துள்ளது. மம்தா பானர்ஜி உத்தரவிட்டதும் இதற்கான, அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.