ஒரு பிளேட் பிரியாணி ரேட் ரூ.190.. கோபத்தில் ஹோட்டல் ஓனரை சுட்டு கொன்ற கஸ்டமர்!
Recommended Video
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு பிளேட் பிரியாணியை ரூ.190க்கு விற்ற ஓட்டல்காரரை கஸ்டமர் ஒருவரே சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் நார்த் 24 பர்கனாஸ் மாவட்டத்தில் இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்துள்ளது. இப்போதுதான் இதுகுறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சுட்டுக் கொல்லப்பட்டவர் பெயர் சஞ்சய் மண்டல் என்று தெரியவந்துள்ளது.
மேற்கு வங்கத்தில் சம்பவம்
ஒரு பிளேட் பிரியாணியை ரூ.190 என்ற விலையில் விற்பனை செய்து வந்துள்ளார் சஞ்சய் மண்டல். 4 நண்பர்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுவிட்டு பிரியாணிக்கு பணம் கொடுக்க சென்றுள்ளனர். அப்போது இந்த விலை ரொம்பவே அதிகம் என்று சஞ்சய் மண்டலுடன் அந்த நண்பர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
துப்பாக்கி சூடு
சாப்பிட்டுவிட்டு பணம் தரப்போகும் நேரத்தில் விலையை பற்றி பேசுவதா என்று சஞ்சய் மண்டல் பதிலுக்கு வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் இரு தரப்புக்கும் நடுவே வாக்குவாதம் ஏற்பட்டு கை கலப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. அப்போது, நண்பர் கூட்டத்தில் ஒருவர் தன்னிடமிருந்த கைத் துப்பாக்கியால் திடீரென சஞ்சய் மண்டலை நோக்கி சுட்டுள்ளார். இதையடுத்து அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. நால்வரும் தப்பியோடியுள்ளனர்.
சுட்டது யார்
அங்கிருந்தவர்கள் உடனடியாக சஞ்சய் மண்டலை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் சஞ்சய் மண்டல் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். சஞ்சய் மண்டல் சகோதரர், போலீசாரிடம் இதகுறித்து கூறுகையில், முகமது பைரோஸ் என்பவர்தான் துப்பாக்கியால் சுட்டது என்று அடையாளம் காட்டியுள்ளார்.
போலீசார் நடவடிக்கை
இதையடுத்து முகமது பைரோஸை போலீசார் கைது செய்துள்ளனர். அவருடன் அன்று பிரியாணி சாப்பிட்டு தகராறு செய்த பிற நண்பர்கள் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். பிரியாணி தகராறில் ஓட்டல் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.