மேற்கு வங்கத்திற்கு இதைவிட வேறு அவமானம் உண்டா?: ரயில்வே பட்ஜெட் பற்றி மமதா
கொல்கத்தா: மேற்கு வங்கத்திற்கு இது போல் ஒரு அவமானத்தை யாராவது பார்த்தது உண்டா என்று ரயில்வே பட்ஜெட் குறித்து அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா 2014ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். அவர் 58 புதிய ரயில்களை அறிவித்தார். மேலும் ரயில்வே துறையில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிப்பது குறித்து மத்திய அமைச்சரவையிடம் ஒப்பதல் கேட்கப்படும் என்றார்.
இந்நிலையில் ரயில்வே பட்ஜெட்டில் மேற்கு வங்கம் மொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது,
புதிய அரசு மேற்கு வங்கத்தை புறக்கணித்ததோடு மட்டும் அல்லாமல் அவமானப்படுத்திவிட்டது. இதை விட வேறு அவமானத்தை யாராவது பார்த்தது உண்டா என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ரயில்வே பட்ஜெட்டில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.