பாஜகவும்... ஒவைசியும்... மதத்தால் மக்களை பிரிக்க முயற்சி... மேற்கு வங்க இமாம் கூட்டமைப்பு சாடல்..!
கொல்கத்தா: பாஜகவும், ஒவைசியும் மதத்தால் மக்களை பிளவுப்படுத்த முயற்சிப்பதாக மேற்கு வங்க மாநில இமாம் கூட்டமைப்பு சாடியுள்ளது.
மேலும், ஒவைசி ஒன்றும் இஸ்லாமியர்களுக்கு காட் ஃபாதர் கிடையாது எனவும் அந்த அமைப்பு கடுமையாக விமர்சித்துள்ளது.
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் இ இதிகாதுல் முஸ்லிமீன் கட்சி போட்டியிடுகிறது. இது பீகாரை போல் மேற்கு வங்கத்திலும் சிறுபான்மை மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் வேலையாக அரசியல் நோக்கர்கள் மத்தியில் கருதப்படுகிறது.
ஒவைசி தமிழகத்திற்கு தேவையில்லை... அதிரடி காட்டும் ம.ம.க தலைவர் ஜவாஹிருல்லா..!
மேம்பாடு
இந்த சூழலில் மேற்கு வங்க இமாம் கூட்டமைப்பு தலைவர் முகமது யஹ்யா ஒவைசி குறித்து தெரிவித்துள்ள கருத்தில், மேற்கு வங்கத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் மதத்தை அடிப்படையாக கொண்டதல்ல என்றும் வளர்ச்சியையும், மேம்பாட்டையும் கருத்தில் கொண்டு மக்கள் வாக்களிக்கும் தேர்தல் எனவும் கூறியுள்ளார்.
ஒவைசி
மேலும், ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு மஜ்லிஸ் கட்சியை நடத்தி வரும் அசாதுத்தீன் ஒவைசி காட்ஃபாதர் கிடையாது என்றும் அவரை சிறுபான்மையின மக்கள் பின்பற்ற வேண்டிய அவசியமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சி செய்கிற வேலையை தான் ஒவைசி கட்சியும் செய்வதாக சாடினார். பாஜக எப்படி மக்களை மத ரீதியாக பிளவுபடுத்துகிறதோ அதே பணியை தான் ஒவைசி கட்சியும் செய்து வருவதாக விமர்சித்துள்ளார்.
வாக்கு கேட்காதீர்
மேலும், மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் அனைத்து தரப்பு மக்களும் வசிக்கும் பகுதிகளில் போட்டியிடாமல் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மட்டும் ஒவைசி கட்சி ஏன் போட்டியிடுகிறது என்ற கேள்வியையும் மேற்கு வங்க இமாம் கூட்டமைப்பு தலைவர் யஹ்யா எழுப்பியுள்ளார். எந்த கட்சியினரும் மதத்தின் பெயரைக் கூறி வாக்குக் கேட்க வேண்டாம் என்றும் அவ்வாறு கேட்டால் அவர்களை மக்கள் ஆதரிக்கக் கூடாது எனவும் தெரிவித்திருக்கிறார்.
தேவையில்லை
தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, உட்பட பல மாநிலங்களிலும் ஒவைசிக்கு இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.இதனிடையே கடந்த வாரம் தான் ஒவைசி குறித்து பேட்டியளித்த மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, ஒவைசி போன்றவர்களின் தேவை தமிழகத்திற்கு தேவையில்லை எனக் கூறியிருந்தார். இப்போது மேற்கு வங்கத்திலும் இதேபோன்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.