மோப்பம் பிடிப்பதில் கில்லாடிகள்.. பின்லேடனை பிடித்த நாய்களுக்கு மேற்கு வங்க காவல்துறையில் வேலை!
கொல்கத்தா: மோப்பம் பிடிப்பதில் பலே கில்லாடிகளான பின்லேடனை பிடிக்க உதவிய பெல்ஜியன் மேலினாய்ஸ் இன நாய்களுக்கு மேற்கு வங்க போலீசார் வேலை கொடுத்துள்ளனர்.
அமெரிக்க ராணுவத்தில் பெல்ஜியன் மேலினாய்ஸ் வகை நாய்கள் மோப்ப பிரிவில் இடம் பெற்றுள்ளன. அவை தான் உலகை அச்சுறுத்தி வந்த அல் கய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் மற்றும் ஐஎஸ் தீவிரவாத இயக்க தலைவன் பாக்தாதி ஆகியோரை பிடிக்க அமெரிக்க ராணுவத்துக்கு உதவின.
நன்றியுள்ள ஜீவனான நாய்களுக்கு இயற்கையாகவே மோப்ப சக்தி அதிகம், குண்டு வெடிப்பு சம்பவங்கள் , கொலை குற்றவாளிகளை கண்டுபிடிப்பது, திருடன்களை கண்டுபிடிப்பது உள்ளிட்ட பல்வேறு வன்முறை சம்பவங்களில் நாய்கள் சிறப்பான பணியினை செய்து வருகின்றன.
இதனால் உலகம் முழுவதும் காவல்துறையில் மோப்ப படை பிரிவு ஒன்று நாய்களுக்காகவே செயல்படுகிறது. இந்நிலையில் மோப்பம் பிடிப்பதில் பலே கில்லாடிகளான பின்லேடனை பிடிக்க உதவிய பெல்ஜியன் மேலினாய்ஸ் இன நாய்களை தங்கள் படையில் சேர்க்க கொல்கத்தா காவல்துறை முடிவு செய்துள்ளது.
கொல்கத்தா தலைமை செயலகம் அருகே 'நபானா' என்ற பெயிரல் புதிய மோப்ப நாய் பிரிவு தொடங்கப்பட உள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். வெளியில் பயிற்சி பெற்ற பெல்ஜியன் மேலினாய்ஸ் நாய் ஒன்று ஏற்கனவே இப்படையில் சேர்க்கப்பட்டு உள்ளது. கூடுதல் மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளித்து சேர்க்க அம்மாநில போலீசார் முடிவு செய்துள்ளனர்.
கொல்கத்தாவில் நடைபெறும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பெல்ஜியன் மேலினாய்ஸ் நாய்கள் இனி பயன்படுத்தப்பட உள்ளன. தற்போதைய நிலையில் மத்திய ரிசர்வ் படை போலீசார் பெல்ஜியன் மேலினாய்ஸ் நாய்களை தங்கள் பிரிவில் வைத்துள்ளனர். இந்த நாய்களை மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும் படைப்பிரிவில் சேர்க்க மத்திய அரசிடம் அனுமதி கேட்டு வருவதாக கூறப்படுகிறது.