மத்திய அரசு சொல்வது போல் சுதந்திர தினத்தை கொண்டாட முடியாது.. மம்தா பானர்ஜி திட்டவட்டம்
மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது போன்று சுதந்திர தினத்தைக் கொண்டாட முடியாது என்று முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
டெல்லி: பள்ளிகளில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் குறித்து மத்திய அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையை பின்பற்ற முடியாது என்று மேற்கு வங்காள அரசு திட்டவட்டமாக மறுத்து விட்டது.
இந்தியாவின் 71வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சக இணை செயலாளர் மனீஷ் கார்க், அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பினார். அதில், ஆகஸ்டு 9ம் தேதி முதல் 30ம் தேதி வரை, அனைத்து பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் 'சங்கல்ப்' என்ற நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து மத்திய அரசு அனுப்பியிருந்த சுற்றறிக்கையை பின்பற்ற வேண்டாம் என்று மேற்கு வங்க அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும், மத்திய அரசு கூறியுள்ளபடி சுதந்திர தின நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம் என்று மேற்கு வங்க மாநில பள்ளிக்கல்வித்துறை, மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் கடிதம் எழுதி உள்ளது.
தேச பக்தி என்பது திணித்து யாருக்கு வருவதில்லை. அது இயல்பிலேயே இந்தியர்களுக்கு உள்ளது. மேற்கு வங்கத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் கொடியேற்றி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி சுதந்திர தின விழா ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. பள்ளிகள் மட்டும் இன்றி அலுவலகங்கள், தொழிற்சாலைகள் என அனைத்து இடங்களிலும் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது என்று அம்மாநில கல்வி அமைச்சர் சாட்டர்ஜி கூறியுள்ளார்.
இதற்கிடையே, மத்திய அரசின் சுற்றறிக்கை என்பது வெறும் பரிந்துரைதானே தவிர, கட்டாயம் இல்லை என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அலுவலர் தெரிவித்துள்ளார். மேலும், மத்திய அரசு பிறப்பித்த சுற்றறிக்கையின் நோக்கம், தேசபக்தி உணர்வை உருவாக்கவேண்டும் என்பதுதான். இது ஒரு அரசியல் கட்சியின் செயல் திட்டம் அல்ல. மதச்சார்பற்ற செயல் திட்டம் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.