மேற்கு வங்க மாநிலத்தில் விபரீதம்.. மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் நெரிசல்.. காயமடைந்த தொண்டர்கள்
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் சிலர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்து வைத்தார். இதையடுத்து தாகூர் நகர் என்ற பகுதியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யபட்டிருந்தது.
மைதானத்தின் நடுவே பெண்களுக்கான இடம் அமைக்கப்பட்ட நிலையில், மைதானத்துக்கு வெளியே பல நூறு ஆண் தொண்டர்கள் உள்ளே வருவதற்கு முண்டியடித்தனர்.
அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சிலர் காயமடைந்தனர். சிலர் வெளியே இருந்து உள்ளே நாற்காலிகளைத் தூக்கி வீசி இடம்பிடிக்க முற்பட்டனர். இதையெல்லாம் கவனித்த நரேந்திர மோடி, அங்கு தனது உரையை விரைவில் முடித்துக் கொண்டு மற்றொரு இடத்துக்கு கிளம்புவதாக கூறிவிட்டு சென்றார்.
இதன்பிறகு துர்காபூர் பகுதியில் பாஜக பொதுக் கூட்டத்தில் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது தாகூர் நகர் பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்காக பொது மக்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொண்டார் நரேந்திரமோடி.
PM Narendra Modi in Durgapur, West Bengal: I used to think that Didi who has herself suffered a lot during Left regime will not walk on the same path, but I was surprised that she adopted the same tactics. You can take this from me in writing 'Inka jaana tae hai' pic.twitter.com/CHZXQu7B6z
— ANI (@ANI) February 2, 2019
முன்னதாக, தாகூர் நகரில், தனது பிரச்சார கூட்டத்தின்போது குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு மேற்கு வங்காள மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தில் ஆதரவு அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
சுதந்திரத்துக்குப் பிறகு மக்கள் எங்கு எங்கு வசித்தார்களோ, அங்கேயே தங்கி விட்டனர். ஆனால் தொடர்ந்து துன்புறுத்தலுக்கு உள்ளாகி வருவதால் அவர்கள் தாயகம் திரும்புகிறார்கள். அவர்கள் இந்துவோ, சீக்கியர்களோ, பார்சியர்களோ, கிறிஸ்தவர்களோ யாராக இருந்தாலும் இந்தியாவில் அவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த சட்டம் கொண்டுவரப் படுகிறது என்று மோடி பேசினார்.
PM Modi in Durgapur,West Bengal: There was a lot of enthusiasm during my rally in Thakurnagar, and I think the ground was filled twice its capacity,I would like to apologise for the discomfort the people went through; Visuals of those injured during the rally (Pic 2&3) pic.twitter.com/SlhflpfeDj
— ANI (@ANI) February 2, 2019
எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மமதா பானர்ஜி வன்முறையை தூண்டிவிடுகிறார். தாகூர் நகரிலுள்ள இந்த கூட்டத்தை பார்க்கும் போது, மமதா பானர்ஜி எதற்காக அவ்வாறு வன்முறையை கையில் எடுக்கிறார் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது என்று மோடி தனது உரையின்போது குறிப்பிட்டு பேசினார்.